பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஆறு இடும் மேடும் மடுவும் போல், ஆம் செல்வம்
மாறிடும் ஏறிடும்;— மா நிலத்திர்!—சோறு இடும்;
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பு ஆக,
உள் நீர்மை வீறும், உயர்ந்து.32

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.33

கல்லானே ஆனாலும். கைப் பொருள் ஒன்று உண்டாயின்,
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர்: இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது, அவன் வாயில் சொல்.34

பூவாதே காய்க்கும் மாமும் உள; மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார்தாம் உளரே; தூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது. உணர்வு.35

நண்டு, சிப்பி, வேய், கதலி, நாசம் உறும் காலத்தில்,
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல்—ஒண்டொடீஇ!—
போதம், தனம், கல்வி, பொன்ற வரும் காலம் அயல்-
மாதர்மேல் வைப்பார், மனம்.36

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்து ஆய நூலகத்தும் இல்லை; நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால், கவலை படேல்; நெஞ்சே!— மெய்
விண் உறுவார்க்கு இல்லை, விதி.37

நன்று என்றும் தீது என்றும், நான் என்றும் தான் என்றும்,
அன்று என்றும் ஆம் என்றும், ஆகாதே நின்ற நிலை
தான் அது ஆம் தத்துவம் ஆம்; சம்பு அறுத்தார், யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.38

முப்பதாம் ஆண்டு அளவில், மூன்று அற்று, ஒரு பொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறாள் ஆயின், செப்பும்
கலை அளவே ஆகும்ஆம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகும் ஆம், மூப்பு.39

தேவர் குறளும், திரு நான்மறை முடிவும்,
மூவர் தமிழம், முனி மொழியும் கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்,
ஒரு வாசகம் என்று உணர்.40