பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்


சிறுவர் சிறுமியர் கவ்வி பயிலத் தொடங்கும் காலத்தே முதன் முதவாகத் தெரிந்துகொள்கிற 'ஆத்திசூடி.' முதற்கொண்டு, இளைஞர் முதல் முதியோர் ஈறாக எல்லாரும் போற்றிவரும் எட்டு நீதி நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவற்றுள் ஔவை மூதாட்டி யாரின் நீதி நூல்கள் நான்கு. அவையாவன: ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி. இவற்றுள் ஆத்திசூடி முதலிய முதல் மூன்றும் தொடக்கப் பாடலின் முதற் குறிப்பால் பெயர் பெற்றவை. வாக்குண்டாம்' என்பது 'மூதுரை' என்னும் பெயராலும் வழங்கப்பெறும். ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் தமிழில் வரும் மொழி முதல் எழுத்துக்களின் அடைவில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ளன. இப் பாடல்கள் ஒற்றை அடியாக அமைந்த அறவுரைக் கட்டுரைகள்; இலக்கணங்களில் பயிலும் சூத்திரங்கள் போன்றவை. மூதுரையும் நல்வழியும் நான்கு அடி வெண்பாக்களைக் கொண்டவை.

அதிவீரராம பாண்டியரின் 'வெற்றி வேற்கை' கொன்றை வேந்தனைப் போன்ற பாடல் அமைப்பினை உடையது. சிற்சில பாடல்களில் இரண்டு அடிகளும், ஒருசில பாடல்களில் மூன்று அடிகளும் உள்ளன. 56, 17, 75-ஆம் பாடல்கள் முறையே 4, 5, 6 அடிகளை உடையனவாகக் காண்கின்றன. உலகநாத பண்டிதரின் உலக நீதி பதின்மூன்று விருத்தப் பாடல்களைக் கொண்டது. முதற் பன்னிரண்டு பாடல்களின் இறுதி இரண்டு அடிகள் தவிர, ஏனைய அடிகள் எல்லாம் தனித்தனி நீதி வாக்கியங்களாகவே அமைந்துள்ளன.

'நீதிநெறி விளக்க'மும் 'நன்னெறியும் ஔவையாரின் வாக்குண்டாம், நல்வழி போன்று நான்கு அடி வெண்பாக்களைக் கொண்டுள்ளன. நீதிநெறிவிளக்கத்தை ஆக்கியவர் குமரகுருபர சுவாமிகள். திருக்குறளின் சாரமாக இந் நூல் அமைக்கப்பெற்றது என்பர். நன்னெறியைச் செய்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த இரு பெரியார்களும் துறவு நெறியில் விளங்கிப் புகழ் சிறந்தவராய், மேலும் பல தமிழ் நூல்களை அளித்துள்ளார்கள்.

ஆத்திசூடி முதலிய இச் சிறு நூல்களிலும்கூட நூற்பெயர்களில்

பிறழ்ச்சியும், பாடல்-தொகையில் மாறுபாடும், பாடல்களில் பல பாட வேறுபாடுகளும் உள்ளன. ஆயினும், இக்காலத்து வழங்கும் பாடல்களும் பாடங்களுமே இந் நூல்களில் மேற்கொள்ளப்பெற்றன.