88
அனுப்பியிருக்கிறார். இதோ பார்! தோட்டத்துப் பூக்களைப் போன்ற அழகுடைய ஒரு சின்னப் பையனும், ஒரு சின்னப் பெண்ணும் கிடைத்திருக்கிறார்கள்!” என்றான்.
அந்தச் செம்படவனும் அவன் மனைவியும் இரட்டைக் குழந்தைகளைத் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல் பாவித்து, அன்பு பாராட்டி வளர்த்து வந்தார்கள். இவ்வாறு ஏழு வருடங்கள் சென்றன. செம்படவனுக்கு வயது முதிர முதிர உடல் தளர்ந்து கொண்டு வந்தது. முன்னைப் போல் அவனால் அதிகமாக மீன்க்ள் பிடிக்க முடியவில்லை. அவன் மீன் பிடிப்பது குறைந்து விடவே மீன்களை விற்றுக் கிடைக்கும் வரும்படியும் குறைந்து விட்டது. அதனால் நான்கு பேர்களைக் காப்பாற்றப் போதுமான வருமானம் இல்லாமல் அவன் கஷ்டப்பட்டான்.
ஒருநாள் சின்ன இளவரசனும் இளவரசியும் செம்படவத் தம்பதிகளை நோக்கி, "அன்புள்ள அம்மா! நீங்கள் இந்த வயதான காலத்தில் எங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டாம். நாங்கள் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறோம்" என்று சொன்னார்கள்.
"குழந்தைகளே! உங்களுக்குப் போதுமான வயது வரவில்லை. நீங்கள் இப்போது போக வேண்டாம்" என்று செம்படவனும் அவன் மனைவியும் சொன்னார்கள்.
ஆனால் இளவரசனும் இளவரசியும் பிடிவாதமாகப் போக வேண்டுமென்று சொன்னதால் கடைசியில் முதியவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இரட்டைக் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் செம்படவன் அவர்களை நோக்கி "குழந்தைகளே! இப்போது நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நாங்கள் இருவரும் உங்கள் பெற்றோர்கள் அல்ல. ஏழாண்டுகளுக்கு முன்னால் கடலில் மிதந்து வந்த