பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பூவை எஸ். ஆறுமுகம்



அமைதியுடன் குளிர்ந்திருக்க வேண்டும். அனுதாபத்துக்குரிய பெண் அல்லள் அவள்; அதிசயத்துக்குரிய பெண் அவள் என்வரை ஏன், அவள் வரையும்கூட, என்னுடைய மனிதத்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன். மெய்யாகவே, ஊர்வசி ஒரு புரட்சிப் பெண்ணே தான்!"பன்னிரண்டு மணிக்கு மேல் தொடர்ந்த இத்தகைய சிந்தனைகள், புதுப்புது உருவத்தோடும் புதுப் புது உள்ளத்தோடும் அவன் மனத்தில் ஒளி வீசி, ஒளிகாட்டிக் கொண்டேயிருந்தன. அவளை என்னென்னவோ கேட்க வேண்டுமென்று 'பூ' அலுவலகத்திலிருந்து திரும்பி, தம்புச் செட்டித் தெருவில் நடந்து, அங்கிருந்து மறுகி, அரண்மனைக்காரத் தெருவில் அடிவைத்து, மீண்டும் மடங்கி, அந்தப் பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, முத்துமாரிச் செட்டித் தெருவில் வந்த சமயம் நினைத்திருந்தானே? ஒரு கேள்வியையாவது அவனால் கேட்க முடிந்ததா? இல்லை! அதற்குகந்த சந்தர்ப்பத்தை அவள் கொடுத்தால்தானே? ஊர்வசியைப் பற்றி எண்ணமிட்டான். அவ்வெண்ணத்தை நினைப்பதற்கு மீண்டும் சக்தி தேவைப்பட்டதை உணர்ந்திருந்தவன்போல, அடுத்த தடவையாகச் சாயாவைக் குடித்தான். ஒரே மூச்சாகக் குடித்தான். இப்போது அவன் சிந்தனைக்குப் புகைச் சூடும் தேவைப்பட்டது. ஊதினான். அவன் ஊதவில்லை சிகரெட்டைத்தான் ஊதினான். நெஞ்சின் வலது விலாப்புறத்தில் லேசாக வலிப்பதாகவும் அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக விழுங்கும் பீப்ளெக்ஸ்ஃபார்ட்'டில் இரண்டைப் போட்டுக் கொண்டு ஒரு குவளை தண்ணீர் ஊற்றினால் வலி தீர்ந்துவிடும் என்ற உபாயமும் அவனுக்கு அத்துபடிதான்! ஊர்வசியைப் பற்றிய அழகிய நினைவை நெஞ்சக்கிழியில் பதித்துச் சிந்தித்தபோது, தன்னையும் அறியாதபான்மையில் ஒரு புது உரிமையும் ஒரு புது உறவும் தோன்றிச் செழித்ததையும் அவன் நன்கு அறிந்தான். கடந்த சில மணிநேரத்தில் அவன் தனக்குத்தானே பக்குவப்படுத்திக் கொண்டிருந்த புதுத் தெம்புக்கு, அந்தப் புது உறவும் புது உரிமையும் நளினம் மிகுந்ததொரு சூழலை உண்டாக்கிக் கொண்டிருந்ததையும் அவன் நறுவிசாக அறிந்திருந்தான். . . . . . . .