பக்கம்:நூறாசிரியம்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நூறாசிரியம்


ஏங்கி வருந்தி நகைத்துக் கூறியதாகும் இப் பாட்டு.

பிள்ளைப் பேற்று நலன் ஒன்றின் பொருட்டாகவே வாய்க்கப் பெற்றிருக்கும் அழகு சான்ற முலைகள், அப் பேறு வாயா விடத்து வறிதே கட்டுப்பெற்று மதர்த்துப் பொங்கி யெழுந்து அண்ணாந்து நிற்றல் எற்றுக்கோ எனத் தம் மதர்ப்பு தவிரவும் ஏமாப்பு தாழ்வுறவும் செய்தன. என்றவாறு.

பெண்மை முற்றித் தாய்மையாய்க் கணியாத விடத்து அத் தாய்மைக்கே உரிய சிறப்புறுப்பாகிய முலையின் கவின் மிக்க நிமிர்பு நாணுத்தரத் தக்கதாகும் என அத் தலைவி நெஞ்சழிந்தாள். ஆகவே அவள் நெஞ்சழிவுக்குத் தக்கவாறு அவ்வுறுப்புகளும் பொங்குதல் தவிர்தலும், நிமிர்தல் தாழ்தலும் செய்தன என்க.

கட்டுத லுற்றுக் கிடக்கும் முலையின் தன்மையினை இதுகாறும் நினையாளாய் நின்ற தலைவி தன் இற் புறத்தே குட்டிகளை ஈனுதலுற்று உளமுவந்து அவற்றைப் பாலுண்ண அழைத்த பெண்யாட்டையும், அதனருகே ஒடித் தம் தலைகளான் தாயின் மடியினை முட்டுவித்துப் பாலருந்தும் மறிகளையும் கண்டு, தன் பெண்மை நலம் தாய்மையாய்க் கனியாது காய்கின்ற துணர்ந்து, நெஞ்சு அழுங்க, அருகே நிற்கும் தோழியை விளித்துத் தன் ஆற்றாமை தோன்றக் கூறினாள் என்க.

திமிர்தல்: விம்முதல், புடைத்தல், பெருகுதல் எனப் பொருள்படும்.

இனி, திமிர்தல் என்னுஞ் சொற்குப் பூசுதல், அப்புதல் என்றும் பொருள் கொண்டு, மார்பகத்தே பூசப் பெறுவனவாகிய சந்தனக் குழை முதலிய விரைப் பொருள்கள் பூசுதலைப் பெறாது தவிர்க்கப் பெற்றன என்றும் கொள்ளலாம். எனினும் செயற்கைப் புனைவு சாரும் பின்னைப் பொருளினும் இயற்கை நலஞ் சார்ந்த முன்னைப் பொருளே சாலப் பொருந்துவதாம் என்னை? நாணுடைமை பற்றியாம் என்க.

தவிர்ந்தன- தவிர்தலாயின.

நிமிர்யின்றி- விறைப்பின்றி, ஏமாப்பின்றி, அண்ணாத்தலின்றி.

துமிதல்- தூறுதல், சிறு மழை பெய்தல், துளி-துமி.

மின்னோடி - மண் பனிப்ப : தொடக்கத்தே துறலாகிப் பின் வலித்து மழையாகப் பெய்ததால் நிலம் குளிர்ந்தது என்க.

முகில் கருமுற்றிப் பொழிதல்: முகில் மழைத்துளி நிரம்புதல் கரு முற்றுதல் போலாம் என்க. மழை பொழிதல் கரு உயிர்த்தலைப் போலாம் என்க. இனி, வினை அடிப்படையிலன்றி நிற வடிப்படையாலும் பொருள் கொண்டு, முகில் கருநிறம் நிரம்பிப் பொழிதலுற்றது என்றுங் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/112&oldid=1181933" இலிருந்து மீள்விக்கப்பட்டது