பக்கம்:நூறாசிரியம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

நூறாசிரியம்




32 அமிழா நெடும்புகழ்


இவனியா ரென்குவி ராயி னிவனே
பேராய மென்னும் பெரும்பெயர்க் களிற்றை
ஆரமர்க் களத்தே அலறக் கிடத்தி
ஊராயத் திருத்தி உருக்குலைத் திட்டுத்
தமிழக வரசைத் தலைமுதல் நிறுத்திய 5
அமிழா நெடும்புகழ் அண்ணாத் துரையே!
அடித்தலை தாழ்த்தித் தமிழ்கொல் தில்லியின்
முடித்தலை நெரித்த மொய்ம்பிவன் மொய்ம்பே!
இமிழ்கடல் வையத்தி யாண்டும் புகழ்கொளத்
தமிழ்விழ வெடுத்த திறலிவன் திறலே! 10
மடம்படு கொள்கை மறித்துயிர்ப் படக்கி
உடம்பட நிறுத்திய விறலிவன் விறலே!
புறம்பொய்த் தொழுகிய புல்லியர் விதிர
அறம்பெறத் தூக்கிய அரசிவன் அரசே!
தற்சார் புற்ற இளையோர்ப் பிணிக்குறுஞ் 15
சொற்சோர் வறிகிலா வினைவலி சூழ்தலின்
தோலா திடுகவன் றோளே;
கானிலை கொள்ளுக செந்தமிழ்க் கழலே!

பொழிப்பு:

(படிவமாய் நிற்கும்) இவன் யார் என்று கேட்பீர் ஆயின், இவன்,பேராயம் என்னும் பெரும் புகழ் சான்ற, களிறு போல்வதாம் ஒரு கட்சியைத் தேர்தல் என்னும் நிறைவுற்ற போர்க் களத்தே தோற்றுப் புலம்பும்படி வீழ்த்தி, ஊர்மக்கள் நடுவே கொணர்ந்து நிறுத்தி, அதன் பொய்யுருவத்தைக் குலைத்து உண்மை உருவம் புலம்படும்படி செய்து, வரலாற்றான் முன் இழந்த தமிழகம் என்னும் பெயரை மீட்டு, அதன் பெயரால் ஓர் அரசை முதன் முதல் அரும்பாடுபட்டு எடுத்து நிலைநாட்டியோனும், காலவெள்ளத்துள் அமிழ்ந்து போகாத நெடிய புகழ் கொண்டோனும் ஆகிய அண்ணாத்துரை என்னும் பெயரினனாம்.தன் அடியின் கீழ்த் தலைமை சான்ற தமிழ் மொழியை வலக்காரத்தால் தாழ்த்தி, அதனை நாள்தொறும் சிறிது சிறிதாக அழித்து நின்ற தில்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/182&oldid=1220674" இலிருந்து மீள்விக்கப்பட்டது