பக்கம்:நூறாசிரியம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நூறாசிரியம்


நிரப்பு - ஈகை நிலையால் ஏற்படும் பொருள் முட்டுப்பாடு. இது சான்றோர் போற்றுதலுக் குரியதாகையின் நிரப்பு எனலாயிற்று. இதனை வறுமை எனக்குறித்தல் சாலாது. நிரப்பு மங்கலச் சொல். தொடர்ந்த வரிசைப்பட்ட வறுமைநிலை யாதலின் நிரல் நிரப்பு எனலாயிற்று. இத்தகைய இலவாந் தன்மையால் அறிவுணர்வு ஊறுபடும் ஆகையான் அறிவயிரும் நிரல் நிரப்பு எனலாயிற்று. அயிர்தல் ஆர உண்ணல்.

தன்னைச் சார்ந்த பிறர்க்குச் சேரும் பொருளையெல்லாம் இறைத்தலால் வரும் தொடர்ந்த வறுமை நிலை அறிவைத் தடைப்படுத்தி, அதனான் வரும் வினைப் பாட்டைக் குறைவிக்குமேயன்றி உளவுணர்வை சிதைத்து விடாது என்னும் குறிப்புத் தோன்றவே நிரப்பு அறிவு அயிரும் என்றது. எத்துணை வறுமை வந்துள்ள போதும் தாம் கொண்ட ஒழுகலாற்றை நல்லுணர்வு சான்றவர் என்றும் கைவிடாது தம் உள்ளவுணர்வில் துளியும் குன்றார் என்ற உறுதிப்பாடு தோன்றலே அவ்வாறு கூறலாயிற்று. ஒப்புரவு உள்ளத்தின் செயலாம். அறத்தால் வந்த பொருளைத் தம் திறத்தால் ஒன்றிப் புறத்தே இருப்பார் யாவர்க்கும் தட்டின்றி வாரியிறைத்து அதனான் பொருள் முட்டுற்ற சான்றவர், அவ்வினைப்பாட்டை அறிவால் ஆயாது உளத்தாலேயே பருகுவர் என்பது உட்பொருள். அறிவான் துன்பெனக் காணப்படுவதுள் உளத்தான் இன்பெனக் காண்டலும் உளதாகலின் இதுபற்றி விரித்துக் கூறலாயிற்று. ஒப்புரவு அறிவுக்குத் துன்பெனினும் உளத்திற்கு இன்பந் தருதல் பற்றியே வள்ளுவரும். ஒப்புரவினால் வரும் கேடு, விற்றுக்கோள் தக்கதுடைத்து என்று வலித்துக் கூறினார் என்க.

உகுகண்ணி உளங்கொளுத்த தகுமனைமேல் அழல் வீசி - தொடர்ச்சியாக வரும் வறுமை நிலையால் மனைவி கண்ணீர் உகுத்தாள் அஃது உளத்தைக் கொளுத்தியது என்றபடி நிரல் நிரப்புக்குக் கண்ணிர் உகுத்ததால் அவள்மேற் கடிதல் வேண்டுதலாயிற்று தம் ஒப்புரவு சான்ற உளத்தைத் தேராது, கண்ணீர் வடித்தல் கடிய வேண்டுவதாகலின் அழல் போலும் சுடு சொற்களை வீச வேண்டியதாயிற்று. என் நிற்கா திறஞ் சான்றதும், தன் படுத்து பெட்பு வாய்ந்ததும், கார் போர்த்த கதிர் போன்று இருப்பதுமான எம் - உள்ள உணர்வையும் அதன் ஒப்புரவையும் உணர்ந்து கொள்ளாத் தகைமையினோகிக் கண்ணீர் உகுத்த தன்மைக்கு அழன்று கடியலாயிற்று. உளம் கொளுத்தப் பெற்ற பின் அதனின்றெழுப்பும் வல்லுணர்வு அழல் போன்ற சாற்களை வீசிற்றென்க. ஒப்புரவினால் வரும் கேட்டிற்குத் தாளாத்தன்மையினாள் எனினும் அவள் தகுதி சான்ற மனைவியே என்று சுட்ட...தகுமனை எனலாயிற்று.

புறவாழ்க்கைப் புற்பழித்து - புறவாழ்க்கையின் புல்லிய தன்மைகளைப் பழித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/42&oldid=1221610" இலிருந்து மீள்விக்கப்பட்டது