பக்கம்:நூறாசிரியம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நூறாசிரியம்


தனக்குப் பாகற் பசுங்காயின் புளிக்குழம்பு விருப்பம் என்று ஏவலனிடம் கூறினாளேனும், அது தன் தலைவர் விரும்பி யுண்ணார் ஆகலின், அது தவிரப் பிற அவர் விரும்பும் கறியினை வாங்கியனுப்பக்கூற, அவன் இவள் விருப்பம் கண்டு, அது தனக்கு விருப்பம் அன்றெனினும், அதனையே வாங்கி விடுத்த பேரன்பினைக் காண் என்று தோழியிடம் கூறினாள் என்க. இஃது அவன் தன் மேல் இயற்கையாகக் காட்டும் அன்பினும் மிகவுயர்ந்த உளச்செயல் ஆகுமென்றும், எனவே அஃது அருளின்பாற்படும் என்றும் கருதிக் கூறினாள் எனக் கொள்க.

தான் விரும்பி யுண்ணும் பாகற்காயின் புளிக்குழம்பு அவனாலும் விரும்பப்படுவதொன்றாக விருந்து, அதனை அவன் தன் பொருட்டு வாங்கி விடுப்பானாயின் அதனை அன்பென்று கருதிக் கொள்வதே இயல்பென்றும், , அஃதன்றித் தன் விருப்பம் அவன் விருப்பம் அன்று எனினும், தன் விருப்பத்தினையே செயல்படுத்தித் தன் விழைவு கருதிற்றிலன் என்பதால், அது தன்மேல் இரங்கிச் செய்த செயலாகலின் அஃது அருளேயென்றும் தெளிந்தனள் எனவும் கொள்க.

முழுத்தும் - முழுவதும்.

பைம்பருக் கொழும்புடை பாகல் - பசிய பருக்களையுடைய கொழுவிப் புடைத்த பாகற்காய். பாகற்காய் தனக்க மிகு விருப்பமான தொன்றாகலின் அதனை வண்ணித்துக் கூறினாள் என்றபடி.

பாகல் என்னாது பருத்த பாகல் என்றும், வெறும் பருத்தது என்னாது கொழுமையாகப் பருத்தது என்றும் கூறினாள் என்க. பசிய பருக்கள் மிகுந்த பாகல் என்பதால் அதன் பிஞ்சுமை கூறினாள் என்க. பாகல் முதிர்வுறின், அது செம்மஞ்சள் நிறம் படருமாகலின், அஃதன்றிப் பசிய இளங்காய் என்று விதந்து கூறினாள் என்றபடி.

ஐ - தலைவன்.

தகை - தகவுடைத்தாம் தன்மை. அருள் நிரம்பிப் பெருமை சான்ற தன்மையான் தகை என்றாள்.

ஐ தகை - தலைவனாகிய தகைவோன்.

என்யான் நோற்றவாறு - யான் இவனைப் பெற எத்தகு பெரு நோன்பு செய்திருத்தல் வேண்டும் என்றபடி

நோற்றல் - நோன்பு கடைபிடித்தல்.

நோன்பு -தவமிருத்தல் நோல் பகுதி.

நோலுதல் - துயர் பொறுத்தல், தவமிருத்தல், புலன் வேட்கை தள்ளி, தன் மனத்தில் தான் வேண்டுவது பெறக்கருதி அது மேல்தான் நீரும் உணவும் அகற்றி மனமுறுத்து நினைப்பக் கிடப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/78&oldid=1221654" இலிருந்து மீள்விக்கப்பட்டது