பக்கம்:நூறாசிரியம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

57


உயிர் உணர்வு ஊரப் பொழிந்து- மாந்தரின் உள்ளுணர்வு மிகும்படி மழைபோற் பொழிந்து.

உயர் வாழ்க்கை - பாடினை உயர்வு சான்ற மாந்த வாழ்க்கை என்னும் பயிர் செழிப்புற்று நிரம்பும்படி பாடினாய் கொல்

கொல் - அசை ஒ! இரக்க வுணர்வு தோற்ற வந்தது.

இனியே - நின் மறைவுக்குப் பின்னதாக இனி.

துவர்இதழ் - சிவந்த இதழ்.

தாமரை- தாமரை மலர். தாமம் - கதிரவன்; அரை தண்டு; மலர் - பூ கதிரவன் கண்டு மலரும் தண்டுப் பூ என்னும் பொருளுடைய தூய தமிழ்ச் சொல். தாமரைப்பூ வென்ற முழுச் சொல் பின் தாமரை என்ற அளவிலேயே பூவைக் குறித்தது.

முரலுதல் - வண்டின் இமிழும் இயற்கை துங்கும் புலவர் இயற்கையோடு பொருந்தி நிற்கும் புலவர். புலவர் - அறிவுடையவர். புலம் அறிவு.

பாவலர் - பா எழுத வல்லவர்.

பாவலரினும் புலவர் சிறப்புடையவர். பா எழுதல் ஒரு கலைப் பயிற்சி. ஒவியம், கற்றளி (சிற்பம்) போலும் பா எழுதுதலும் ஒரு கலையே. புலமை அப்படிப்பட்டதன்று. இயற்கை அறிவு மிகுந்தது பொறிகளாலும், புலன்களாலும் உணரப்பெற்ற உணர்வும், அவை வழி மெய்யுணர்வும் மிகப் பெறுதல் புலமை, இனி, பா எழுதுவோனுக்குப் புலமை நிரம்பி யிருத்தல் வேண்டும் என்பதும், அஞ் ஞான்றே அவன் எழுதும் பா செப்பமும், நுட்பமும், திட்பமும் பொருந்தி விளங்கும் என்பதும் பண்டைத் தமிழ் மரபு. இனி, புலமை பெற்றவர் எல்லாரும் பா வழியினானே தங்கள் அறிவுக் கருத்தினைப் புலப்படுத்தினார் ஆகலின் புலவோர் பாவலரும் ஆனார் என்க.

மயற்கை - அறிவு மயக்கம் அறியாமை.

மறவர் - துணிவு, ஆண்மை மிக்கவர்.

மருட்சி யகற்றிடு புரட்சி - மக்கள் மதி திகைந்த நிலையினை அகற்றிக் கீழ் மேலாகச் செய்யும் நிலை. தமிழும், தமிழரும் கீழ்மையுற்றிருந்த காலை அதனையும் அவரையும் மேன்மையுறுமாறு செய்த நிலை.

இருள் துயில் - இருள் போலும் மண்டிய துயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/83&oldid=1181344" இலிருந்து மீள்விக்கப்பட்டது