பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

நெஞ்சக்கனல்


இரவு ஒன்பதரை மணிக்கு அதிகாரப்பூர்வமான முடிவே தெரிந்துவிட்டது. இருபத்தேழாயிரத்து நூற்றிருபது வோட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியான செய்தி ஃபோனில் வந்தது.

பல நண்பர்களும், பிரமுகர்களும், வர்த்தகர்களும், கட்சித் தொண்டர்களும் பார்த்துப் பாராட்டவும் மாலை சூட்டவும். தன் வீடுதேடி வருவார்களாதலால் இனி மாயாவின் வீட்டிலிருக்கக் கூடாதென்று கருதியவராகக் கமலக்கண்ணன் வீடு புறப்படத் தயாரானார். நிறையக் குடித்திருந்ததனால் மற்றவர்களுக்கு வாடை தெரிந்துவிடக் கூடாதே என முகத்தில் ‘சென்ட்’டை வாரிப் பூசிக் கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார்.

“இந்த வெற்றிக்காக எனக்கு என்ன தரப்போகிறீர்கள்?” என்று பூ மத்தாப்புச் சிலிர்த்தது போல் புன்னகையோடு எதிரே வந்து கிளுகிளுத்தாள் மாயா.

“இந்த வெற்றியே நீ தந்ததுதானே மாயா...” என்று கமலக்கண்ணன் அவளை நெருங்கி இறுகத்தழுவிக்கொண்டார். பேதைகளைத் திருப்தி செய்ய வெறும் புகழ் வார்த்தைகள் மட்டுமே போதும் என்பதில் அவருக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

அவர் வீடு திரும்புவதற்கு முன்பே தயாராக ஒரு கூட்டம் மாலைகளோடு அங்கே அவரைப் பாராட்டுவதற்குக் காத்திருந்தது. மனித இதயத்திலுள்ள தார்மீக பிடிகள்—வாழ்க்கையின் சோர்வுகளாலோ பயத்தினாலோ தளரும் போதும் அவனுக்குப் பெண் வேண்டும், மது வேண்டும், புகழ் வேண்டும். கமலக்கண்ணனுக்கு முதல் இரண்டு வகையிலும் குறைவில்லை. மூன்றாவது வகை ஆசையிலும் இப்போது அவர் வெற்றிப்படியேறி விட்டார்.

“வர்த்தக இனமே உங்கள் வெற்றியால் பூரிப்படைகிறது” என்று கூறிக் குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு ஒர் ஆள் உயர மாலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கமலக்கண்ணனின் கழுத்தில் போட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/118&oldid=1048397" இலிருந்து மீள்விக்கப்பட்டது