பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

117


அடுத்த மாலை கடம்பவனேசுவரர் கோயில் தர்மகர்த்தாவினுடையதாக இருந்தது. “கோயில் திருப்பணிக்கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக வந்தாலும் வந்தீர்கள், கடம்பவனேசுவரன் உங்களுக்கு ஒவ்வொரு யோகமாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டான். இப்போது ராஜயோகமே வந்திருக்கு...” என்றார் தர்மகர்த்தா.

புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஓர் உரோசாப் பூமாலையைக் கமலக்கண்ணனுக்குக் கொண்டுவந்து அணிவித்தார்.

‘சேம்பர் ஆஃப் காமர்ஸ்’, ‘காஸ்மாபாலிடன் கிளப்’, ‘சங்கீத சபை’– எல்லாவற்றின் சார்பிலும்—அவற்றைச் சேர்ந்த பெருந்தலைகள் கமலக்கண்ணனுக்கு மாலை அணிவித்தார்கள். பத்திரிகைக்காரர்கள் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினார்கள்.

“மாநிலத் திரைப்பட நிருபர்கள் சங்க சார்பில் வள்ளல் கமலக்கண்ணன் அவர்களுக்கு இந்த மலர் மாலையைச் சூட்டுகிறேன்” என்று எங்கிருந்தோ திடீரென்று வந்து குதித்த கலைச்செழியன் திடீரென்று உதயமாகியிருந்த ஒரு சங்கத்தின் சார்பிலே கமலக்கண்ணனுக்கு மாலையையும் வள்ளல் பட்டத்தையும் சேர்த்துச் சூட்டினான்.

அந்த நேரம் பார்த்து அங்கு கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவர், “முன்னாள் அறநிலையப் பாதுகாப்பு மந்திரி விருத்தகிரீஸ்வரன் தோற்றுப்போய் விட்டாராமே? தெரியுமா சேதி?” என்று கூறவே கமலக்கண்ணன் பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

இதே விருத்தகிரீஸ்வரன் முன்பொரு சமயம் நான் கோவில் திருப்பணி சம்பந்தமாக ஃபோன் செய்தபோது கமலக்கண்ணனா? எந்தக் கமலக்கண்ணன்? என்று என்னை யாரென்றே தெரியாதவர் போல நடித்தாரே! அன்று என்னை அவமானப்படுத்திய அவர் நாளை நான் மந்திரியானால் என்னைத்தேடி வரவேண்டியிருக்குமென்று எண்ணினார் கமலக்கண்ணன். அப்போது தேசியக் கட்சித் தலைவர் மாலையோடு தேடிவந்தார்.

நெ.–8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/119&oldid=1048401" இலிருந்து மீள்விக்கப்பட்டது