பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

நெஞ்சக்கனல்


அளவாகவும் கண்டிப்பாகவும் பேசினார். ‘செக்’கும் எழுதிக் கொடுத்தார். அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசுவதாலோ, எதிர்த்து விவாதிப்பதாலோ பயன் இல்லை என்பதைப் பிரகாசமும் புரிந்துகொண்டு விட்டான். ஆகவே அவன் ‘செக்’கை வாங்கிக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

அவன் புறப்பட்டுப் போன பின்பு –சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பியிருந்தார். அவர் பிறகு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக முதலமைச்சருக்குத் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை எழுதுவதற்கு உட்கார்ந்தார். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் தயக்கமேற்பட்டது. நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் தமிழில் எழுதத் தன்னால் முடியுமோ முடியாதோ, என்ற பயத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதலானார். எழுத எழுதக் கடிதம் நீண்டு கொண்டே போயிற்று. கடைசிப் ‘பாரா’வில் இராஜிநாமா செய்வதைப் பற்றித் தனியாக சிலவாக்கியங்கள் எழுதித் தன்னுடைய பதவி விலகலை ஏற்குமாறு முதலமைச்சரை வேண்டிக் கையொப்பமிட்டுக் கடிதத்தை முடித்தார் கமலக்கண்ணன், மாலை ஆறுமணிக்கு முதலமைச்சருக்கு ஃபோன்செய்து, நேரில் ஒரு கடிதம் கொடுக்கவேண்டும்! இப்போது உங்களைப் பார்க்க வரலாமா?–என்று கேட்டார். வரச் சொல்லி முதலமைச்சரிடமிருந்து பதில் கிடைத்தது.ஃபோனில் தான் பேசியபோது, “என்ன கடிதம்? இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்”– என்று முதலமைச் சர் ஒப்புக்குக் கேட்டிருந்தாலாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் கேட்கவோ தயங்கவோ செய்யாமல் உடனே வரச்சொல்லி முதலமைச்சர் பதில் கூறியதிலிருந்து ‘தன்னுடைய பதவி விலகலை’...அவர் எதிர்பார்க்கிறார் என்ற அநுமானம் கமலக்கண்ணனுக்குள்ளே உறுதிப்பட்டது. இந்தச் சூழ்நிலை அவருடைய மனத்துக்கு அதிர்ச்சியை அளித்தாலும் வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/186&oldid=1049509" இலிருந்து மீள்விக்கப்பட்டது