பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

191


வளர்த்துக் கொண்டிருப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதைப் போல் பதவிகளைத் தோள் நிறையச் சுமந்து கொண்டு அந்தப் பதவிகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே காலங்கழிப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.

–மனத்தின் விரக்தியில் அவருக்கு இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியது. ‘சர்வோதயக் குரல்’ இதழ் அன்று மாலையிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சமையற்காரன் அந்த வாரத்து ‘சர்வோதயக் குர’லை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ஆவலோடு பிரித்துப் படித்தார் அவர். கமலக்கண்ணனுடைய ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதை வரவேற்று அதில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

“கனல் விளைந்து காக்கும் தீயை அகத்திடை மூட்டுவோம்–என்று மகாகவி பாடியிருப்பது போல் நெஞ்சில் சத்தியாவேசமும், தார்மீகக் கோபமும் நிறைந்துள்ள தொண்டர்களின் கருத்துக்கு எதிராக நடைபோடும் எந்த இயக்கமும் உருப்படாது. ஒரு கட்சியின் செல்வாக்கு அதன் உண்மை ஊழியர்களின் பலம் தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இந்த இராஜினாமாவை ஏற்றதைப் பாராட்டுகிறோம்”–என்று சர்வோதயக் குரலின் தலையங்கத்தில் காந்திராமன் எழுதியிருந்தார்.

–இந்தத் தலையங்கத்தைப் படித்தபோது காந்திராமன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. ‘சிறுமை கண்டு பொங்கும்’ அந்த நெஞ்சின்கனலைக் காந்திராமனிடமும், சிறுமைகளைப் புரியும் கோழைத்தனத்தைத் தன்னிடமும், இருக்கச் செய்த படைப்பின் மேலேயே கோபம் வந்தது அவருக்கு. கையாலாகாத் தன்மை நிறைந்த அந்த ஆற்றாமைக் கோபத்தால் அவர் மனம் தவித்தது, ஏங்கியது, இரங்கியது, புழுங்கியது.

மீண்டும் எப்போதாவது ஒரு பிறவியில் வசதிகளே இல்லாத சாதாரணப் பாமரனாப் பிறந்து நெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/193&oldid=1049522" இலிருந்து மீள்விக்கப்பட்டது