பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நெஞ்சக்கனல்


தமா முடியும்?”– என்று வெண்ணெய்க்கண்ணனாரை நோக்கிக் கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கமலக் கண்ணன். வெண்ணெய்க்கண்ணனாருக்கோ அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று பயமாகப் போயிற்று. மென்று விழுங்கித் தயங்கித் தயங்கிப்பேசினார் அவர்,

“ஒரு கால்த்தில் அச்சொல்லுக்கு அப்பொருள் இருந் திருக்கலாம். இன்று அப்படியில்லை.”

“அதெப்படி? நீர் சொல்லிட்டாப்பில ஆச்சா அகராதிக்காரன் கொட்டை எழுத்திலே ‘சூதாடுமிடம்’னு போட்டிருக்கானே?”

“சரி! நீங்கள் தயங்கினால் வேண்டாம்! அந்த இடத்தில் கழகம் என்ற வார்த்தைக்குப் பதில் சங்கம் என்றே போட்டுக் கொள்ளுங்களேன்”

“சிற்றுார்’னும் வேண்டாம் ஐயா! அதையும் கிராமம் என்று மாத்திக்கிறேன்...”

“சரி, உங்கள் விருப்பம்...”

“சீரிய பணிகள்'ங்கிறத்துக்குப் பதிலா என்ன போடலாம்?”

“அதிலே ஒன்றும் தவறோ பொருட்பிறழ்ச்சியோ இல்லையே? அது அப்படியே இருக்கலாமே?”

“எதுக்கு வம்பு? தெளிவா எனக்குப் புரியற மாதிரி மாத்திப்பிடுவமே?”

‘நல்லபணிகள் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்.”

“சபாஷ்! அப்படிச் சொல்லும்! அது நல்லாப் புரியிற வார்த்தையாயிருக்கு”– இப்படியே பண்டிதர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கமலக்கண்ணன் திருத்த; கமலக் கண்ணன் திருத்திய ஒவ்வொரு வார்த்தையும் கொச்சையாயிருக்கிறதே என்பதற்காகப் பண்டிதர் வாதிட்டு வருந்த, அந்தப் பத்து நிமிஷப் பிரசங்கத்தைத் தயாரித்து முடிக்க. இரவு 8 மணிவரை ஆகிவிட்டது. அலுவலகத்தில் கமலக் கண்ணனின் ஸ்டெனோவும், காரியதரிசியும் தவிர மற்றவர் கள் எல்லாம் வீட்டுக்குப் போயிருந்தார்கள். நிறைய நாற்காலிகளும், மேஜையுமாக ஹால் வெறிச்சென்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/28&oldid=1016359" இலிருந்து மீள்விக்கப்பட்டது