90 & புலவர் கா. கோவிந்தன்
அழிந்த உள்ளம் உடையோளாய நான், அவனைக் கண்டதும், வாய்விட்டு அழுது, அவனை வழி மறித்து, 'ஏடா! என்னை மறந்ததோடு நில்லாமல், என். மார்பிற் கிடந்து துயின்ற மகிழ்ச்சியையும் மறந்து விட்டனையோ? எனக் கேட்டுப் புலம்பினேன் போலவும், அதுகேட்ட அவன், 'கண்ணே ! காதலி! என்னால் நீ நெடிது வருந்தினை; வலையில் அகப்பட்டு வருந்தும் மயில் போல், தாயும் தந்தையும் அமைத்த காவலால் கட்டுண்டு பெரிதும் துன்புற்றனை; அத்துன்பமெல்லாம் என்னால் வந்ததன்றோ! நின் வருத்தத்திற்குக் காரணமாய நான் அது தீர்க்க நினையாது, நின்னை மேலும் வருத்தி விட்டேன். என் பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக!' எனக் கூறியவாறே, அவன் தலை என் கால்களிற் படியும் வண்ணம் வணங்கியதைப் போலவும், அவன் அவ்வாறு வணங்கி நிற்கவும், 'பிழை புரிந்து பெருந்துயர் அளித்துவிட்டு, இப்போது வந்து வணங்கி நிற்கின்றனனே, என்னே இவன் கொடுமை! என்ற எண்ணமே ஆட்சி செய்திருந்தமையால், அவன் மார்பில் கிடந்து மணக்கும் மாலையையே கோலாகக் கொண்டு அவனை நையப் புடைப்பேன் போலவும், அது கண்ட அவன், பெண்ணே! என்னை இவ்வாறு வருத்த நான் செய்த பிழைதான் யாதோ? பிழை புரியாத ஒருவனைப் பிடித்து வருத்தும் உன் அறியாமையை என்னென்பேன்! எனக் கூறித் தப்பிப் போகப் பார்ப்பான் போலவும் கனாக் கண்டேன்.
"தோழி! நான் கண்டது கனவே யாயினும், அவனை அக் கனவில் தெளிவாகக் கண்டேன். தோழி! கனவு நனவாகும் என நல்லோர் கூறக் கேட்டுளேன் ஆதலின், கனவில் வந்த காதலன், நாம் அறிய நனவிலும் வருவன்