நெய்தற் கன்னி ஒ 95
கடல் அவளுக்கு விடை அளிக்காது போகவே, கடற் காட்சியால் நம் கவலை மிகுவதல்லது குறையாது எனக் கண்டு, கடற்கரையை விடுத்து ஊர்ப் பொதுவிடத்தை அடைந்தாள். அவள் உள்ளம் ஆங்கும் அமைதி கண்டிலது. மன்றின் நடுவே, வானுற ஓங்கி வளர்ந்திருந்தது ஒரு பனை மரம். அதன் உச்சியில் ஒலைகளுக்கிடையே கூடுகட்டி வாழ்ந்திருந்த அன்றிற் பறவை ஒன்று உரத்த குரல் எடுத்து ஓயாது கூவிக் கொண்டிருந்தது. அதன் குரலொலி அடங்கியிருந்த அவள் காதல் நோயைக் கிளறி விட்டது. அதனால் அன்றிலை நோக்கி, "ஏ அன்றிலே! அன்பு காட்டி இன்பம் அளிக்கவல்ல என் காதலன் வந்து என்னை வாழ்விக்காமையால், நல்லதை அழித்து அல்லதை மேற்கொண்டு விட்டனனே என எண்ணி வருந்தும் என்பால் இரக்கம் கொண்டு வருந்திக் கூவுகின்றனையோ ? அல்லது உயிருக்கினிய துணைவனாய் இருந்து வாழ வேண்டிய கணவன் பிரிந்து போய் விட்டானாக வருந்தி வாடும் என்னைப் போல், நீயும் உன்னைக் கைவிட்டுப் போன காதலனை நினைந்து வருந்துகின்றனையோ?" எனக் கேட்டு வாய் விட்டுப் புலம்பினாள்.
அவ்வாறு புலம்பியிருப்பவள் செவிகளில், ஆனிரைகளை ஒட்டிக் கொண்டு ஊர் புகும் ஆயர், அவற்றைத் தொடர்ந்து வருங்கால் எழுப்பும் குரலொலி வந்து புகுந்தது. இன்ப ஊற்றாய் ஒலித்த அக்குழலோசை அவளுக்குத் துன்பவுருவாய் வந்து ஒலித்தது. உள்ளம் துயர்க்குள்ளாகவே, அவள் வாய் அவளை அறியாதே, "ஆயர் குழலினின்றும் தோன்றித் துயர் தரும் குழலிசையே! நடுங்கும் பணியோடு இருளசூழத் தொடங்கி