பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


15

கொடுமை என்பது லாட்டரிச் சீட்டு மாதிரி. தோற்கத் தோற்க, வாங்கச் சொல்லும்; போதை மாதிரி-போடப்போட, போட வைக்கும்; சூதாட்டம் மாதிரிதோற்றாலும், வென்றாலும், தொடரச் சொல்லும்; எல்லாவற்றிற்கும் மேல், பப்ளிசிட்டி மோகத்தைப் போன்றது-இருப்பதில் துவங்கி, இல்லாததில் முடிய வைக்கும்.

ஆரம்பத்தில், மாடக்கண்ணுவையும், கலாவதியையும் லேசாக அடித்து, பலமாக மிரட்டி 'உண்மையை' வரவழைத்துவிட வேண்டும் என்று தான், முத்துலிங்கம் அவர்களை, தோட்டத்திற்குக் கொண்டு வரச் செய்தார். ஆனால், வீட்டிலிருந்து புறப்படும் போதே, தமிழரசியிடம்-அவர் பாணியில் சொல்லப்போனால் 'கேவலம், ஒரு பொம்பிளையிடம்' தோற்றதை, கலாவதியிடம் வெற்றியாகக் காட்டவேண்டும் என்ற வெறி வந்தது.

இரண்டு 'போடோ', ஒரு 'சூடோ' போட்டால், உண்மை தானாக வந்து விடும் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. உடனே, அவர்கள் சொல்லப் போகும் இடத்திற்கு, தமது தலைமையில் ஒரு 'பிரதிநிதிக் குழுவை' அழைத்துச் சென்று, வினைதீர்த்தானை ராத்திரியோடு ராத்திரியாகக் கொண்டு வந்து, அவன் தலையை மொட்டை யடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்கலை மாலையைப் போட்டு, கழுத்தில் மணல் பெட்டியை ஏற்றி, தெருத் தெருவாக, அவனை ஊர்வலமாக அடித்து, அழைத்துச் செல்ல வேண்டும். அப்புறந்தான், ஒரு கையையோ, காலையோ வெட்டவேண்டும் என்று நினைத்தார்.