பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

155

கலாவதி, மீண்டும் குப்புறப்படுத்து, மல்லாந்து புரண்டு பக்கவாட்டில் சாய்ந்து, கால்களை நீட்டி, கைகளை முறுக்கி கசிந்து கொண்டிருந்தாள். உயிரை உருட்டுவது போல், உடம்பை உருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, பழைய படியும் அசைவற்றுக் கிடந்தாள்.

திகைத்து நின்ற முத்துலிங்கமும், கையாட்களும், ஒருவரை ஒருவர் பார்த்துப் பயப்படுவது போலவும், பயமுறுத்துவது போலவும் பார்த்துக் கொண்டார்கள். நெடிய மௌனம்! இரவிற்கு மரண முத்திரை குத்திய மௌடீக மெளனம்! ஐந்து நிமிட அராஜக இடை வெளிக்குப் பிறகு, பிள்ளையார், வாயைப் பிராண்டினார்.

“என்னப்பா இது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியுது. முத்துலிங்கம்... ஒன்னத்தான். இது, இதோட நிக்காதே... ஒன்னால நாங்களும் முட்டாத்தனமாய்...”

பேச்சிமுத்தும் பேசினார்.

“கடைசில, விதி நம்மை தூக்குல போடப் போகுது பாரு. இதுக்குத்தான் கேட்பார் பேச்சைக் கேட்கக் கூடாது என்கிறது.”

தலையில் கை வைத்தபடி நின்ற முத்துலிங்கம், லேசாய் சுதாரித்தார்.

“எப்படியோ எதிர்பார்த்தது கிடைக்காமல், எதிர் பாராதது நடந்துட்டு, ஒங்க வீட்ல இப்படி ஒருத்தி ஓடிப் போய், ஒங்க தோட்டத்துல இப்படி ஒன்று நடந்திருந்தாலும், அங்கேயும் முன்னால் நிற்கிற ஆளு நான். நான் வேணுமுன்னால்... எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்கிறேன். தலைபோனாலும் ஒங்களக் காட்டிக் கொடுக்கல. நீங்க வேணுமுன்னால் போங்க. நான் எக்கேடும் கெட்டுப் போறேன்.”

“சரிப்பா ... இப்போ இவளை என்ன பண்ணலாம்? இவளும் செத்து ரெண்டு கொலையாய் ஆயிடப் போவுது.”