பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

நெருப்புத் தடயங்கள்

கிணற்றையும், சுடுகாட்டையும் பார்த்தபடியே, முத்து லிங்கம் குத்துக்காலிட்டு உணர்ச்சியற்றுக் கிடந்தார். பிணக்களையோடு, பேய்க்களை தோன்ற, முகத்தை கால் களுக்குள் மாட்டிக் கொண்டார்.

பகலவன் உதித்து, பறவைகள் ஆர்த்தபோதும், எழாத முத்துலிங்கம், வெயிலின் உறைப்பு உஷ்ணமான போதுதான் எழுந்தார். மீண்டும் கிணற்றுப் பக்கம் போய், கீழே பார்த்தார். எதுவும் தெரியவில்லை. பிணம் மிதக்க எப்படியும், இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதற்குள் எதையாவது ஜோடிக்க வேண்டும். எப்படி ஜோடிக்கலாம்? இந்த தமிழரசி என்ன செய்வாளோ?

முத்துலிங்கம் தள்ளாடினார். தள்ளாடித் தள்ளாடி, நடந்தார். வீட்டில் போய் அப்படியே சாய வேண்டும் போலிருந்தது. அதே சமயம், வீட்டிற்குப் போகவே மனமில்லை. ‘கடைசியில், அம்மா–என்னைப் பெற்றவள்– இப்படிப்பட்டவளா? மாடக்கண்ணு, நீ தோற்கல. நான் தான் ஒன் கிட்டே தோற்றுட்டேன்.’

ஆங்காங்கே, உட்கார்ந்து உட்கார்ந்து, எழுந்தெழுந்து நடந்தார் முத்துலிங்கம். வழியில் பார்த்தவர்களிடம் முகம் காட்டாமல், ஒதுங்கியபடியே நடந்தார். ஊர் முனைக்கு வந்ததும், அவர் தலை தானாகக் கவிழ்ந்தது. தொலைவிடத்தைப் பார்க்காமலே, தலை குனிந்தபடியே நடந்தவர்...

“அதோ... வாரான்... அதோ வாரான். பிடியுங்க... பிடியுங்க” என்ற கோரஸ் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார். எதிரில் பத்துப் பதினைந்து போலீசாருக்கு மத்தியில், கலாவதியைத் தூக்கிச் சென்ற பேச்சிமுத்து, வீரபத்திரன், தோட்டத்தில் இருந்து போன பிள்ளையார் ஆகிய மூவர் கைகளும் ஒன்றுடன் ஒன்று கட்டப்பட்டு, அவர்களை ஒரு சிலர் மாடுகளைப் போல் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.