பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

159

போலீசார் அவர்களை அடித்தும், பிடித்துத் தள்ளியும் நடத்திக்கொண்டிருக்க, அவர்கள் பின்னால் ஊரே திரண்டு வந்தது. முத்துலிங்கத்தைப் பார்த்ததும் கையாட்களின் பெண்டு பிள்ளைகள் போலீசாருக்கு முன்னால் ஓடி வந்தார்கள். முத்துலிங்கம் செய்வதறியாது நிலையிழந்து நின்ற இடத்தை நோக்கி, மண்ணை அள்ளி வீசினார்கள். ஒப்பாரிச் சத்தத்துடன், அவரைப் பார்த்து ஓடினார்கள்.

“ஏ...கரிமுடிவான்... இந்த தடிமாட்டு மனுசங்ககிட்டே...கலாவதிய கொடுத்துட்டு தப்பிக்கவாடா பார்த்தே? ஒரு ஏழை மேல, வேற ஏழைங்களை யாடா ஏவி விட்டே? குடிகெடுப்பான். நீ கொலகாரனாய் ஆனது போதாதுன்னு, எங்க குடும்பத்தையும் அப்படி ஆக்கிட்டியேடா, வழியில இவங்கள மடக்குன போலீஸ் ஒன்னை விடாதுடா?”

முத்துலிங்கத்தை நோக்கி போலீசாரும், ஊர்க் கூட்டமும் ஓடியது. லத்திக்கம்புகள் நீளமாக, பெண்களின் கைமண்கள் தூள் பறக்க, கூட்டம் கத்திக்கொண்டே ஓடியது.

முத்துலிங்கமும் ஓடினார். எந்தப் போலீசிடம், சின்னச் சின்ன காரியங்களுக்குப்போய் வெற்றி கண்டாரோ, அவர்களுக்குப் பயந்து ஓடினார். “ஏய்... நில்லு... நில்லு” என்ற போலீஸ் வார்த்தைகளோடு, ஊர்க் கூட்டம் எறிந்த கல்லும் மண்ணும் முதுகில்பட, முத்துலிங்கம் கண்மண் தெரியாமல் ஓடினார். ஊருக்குள் வந்த நரி தப்பித்து ஓடுவதுபோல், சந்து பொந்துகளில் புகுந்து, மேடுகளில் கைகளை ஊன்றி, நான்கு கால் மனிதர்போல் ஓடிக்கொண்டிருந்தார்.