பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

நெருப்புத் தடயங்கள்

தாமோதரன் சட்டென்று எழுந்தான். ரைட்டரிடம் வந்து “நான் நாராயண குரு கோவில் வரைக்கும் போயிட்டு வாரேன்” என்றான். ரைட்டர் அவனை விநோதமாகப் பார்த்தார்! கோவில் குளத்திற்கு, டூட்டிக்குப் போகும் போதும், சாமி கும்பிடப் போகாதவன், இப்போது நாராயண குருவிடம் போகிறார் என்றால், ஊரில் ஏதோ நடந்திருக்கும். போலீஸ்காரர்களை, நம்பர் சொல்லிக் கூப்பிடாத இந்த இளைஞருக்கு எதுவும் வரப்படாது. ரைட்டர் தன் பங்குக்கு ஒரு சிபாரிசு செய்தார்.

“அப்படியே குமார கோவிலுக்கும் போயிட்டு வாங்க சார்.”

தாமோதரன் புறப்பட்டான்.

ரைட்டர் ‘மோட்டார் சைக்கிளில் போங்களேன்’ என்று சொல்லப் போனார். அப்படிச் சொன்னால் ‘நான்... டூட்டில போகல ...’ என்று பதில் சொல்வான் என்பதும் அவருக்குத் தெரியும். இவரைப் போல், எத்தனையோ கான்ஸ்டபிள்கள் வாழ்கிறதும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருப்பதும் ரைட்டருக்குத் தெரியும். அவரே அப்படித் தான். ஆனாலும், இந்தக் காலத்துப் பையனான தாமோதரனிடம் இந்த நெறிகளை எதிர்பார்க்காதவர் அவர். இப்படியே இருந்தால், இவர் எத்தனை நாளைக்கு இந்த டிபார்ட்மென்டில் குப்பை கொட்ட முடியுமோ!

சாலைக்கு வந்த தாமோதரன், ஸ்தம்பித்து பார்வை நிலைகுத்த நின்றான். அண்ணன் முத்துலிங்கம், எதிர் திசையில் இருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். பறட்டைத் தலையோடு வந்தார். கை கால் முழுவதும் ஒரே சேறு. முகத்திலும், கழுத்திலும் பல உராய்ப்புக்கள். தாமோதரன் பதறிப் போய் அண்ணனை நோக்கி, நட்டநடு வீதிக்கு வந்தான்.

“என்னண்ணா ... என்ன கோலம் இது?”