பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

179

ஒரு லோகல் லீடர் பேசத் துவங்கினார்:

“பெண்ணுக்கு உரியவரு யாரு?”

இன்னொரு லோகல் லீடர் மொய்தீன் பதட்டப்பட்டுப் பேசினார்:

“அடடே! அருணாசலம் வர்லியா? கையோட கூட்டி வாங்க.”

அருணாசலம் வருவது வரைக்கும், லோகல் லீடர்கள் எம்.ஜீ.ஆர். ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சிகளின் பேரணி வரைக்கும், காரம் இல்லாமலும், சாரம் இல்லாமலும் விசாரித்துக் கொண்டிருக்க, அரசியல் கலப்பற்ற இதரப் பிரமுகர்கள் சில்க் சுமிதாவில் இருந்து, வெளியூர் பெண் வில்லுப் பாட்டாளி ‘அசக்’ லட்சுமி வரைக்கும் பரிசீலனை செய்து கொண்டிருந்தார்கள். இதற்குள், அருணாசலமும், அவர் பின்னால் ராஜதுரையும், துக்கம் தாளாதவர்கள் போல, தோள் துண்டை தலையில் போட்டபடி வந்து, பிரமுகர்கள் கூட்டத்தில், சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள்.

லோகல் அரசியல்வாதிகளிலேயே படுலோகலான ஒருவர், சமரசத்தின் முதல் ரசத்தைத் தெளித்தார்.

“ஏதோ நடந்தது நடந்து போச்சு. இனிமேல் அதை மாற்ற முடியாது. முத்துலிங்கத்தையோ, மற்றவங்களையோ தூக்கில போடுறதுனால போன உயிர் திரும்பப் போறதில்ல. ஒருவேளை அப்படி திரும்புமுன்னு ஒரு நிலைமை இருந்தால், நானே இவங்கள தூக்குல தொங்கப் போடுவேன். அருணாசலம் மச்சான் கொஞ்சம் பெரிய மனசு செய்து, கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.”

அருணாசலம், காரமாகக் கேட்டார்: “எப்டின்னேன்! என் தம்பியை அநியாயமாய் கொன்னதும் இல்லாமல், இவளை இந்தப் பாடுபடுத்திட்டாங்க. இதை எப்டி விட முடியும்?”