180
நெருப்புத் தடயங்கள்
பாதிரியார், வினயமாகப் பேசினார்:
“ஒங்களோட பாசம், எனக்குப் புரியாமல் இல்லை. அதே சமயம், தீமை செய்தவர்களையும் மன்னிப்பது தான் வீரத்திலேயே பெரிய வீரம். ஏசுநாதர் சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவை வேண்டலையா? பொறுத்தவர் பூமியாள்வார்.”
பூமியாளும் அருணாசலம், பொறுத்துக் கொண்டார். ஆனால் அது இல்லாத மண்டையனால் பொறுக்க முடியவில்லை. கூட்டத்துள் இருந்தவன் சத்தம் போட்டே கேட்டான்!
“என்ன ஃபாதர் பேசுறீங்க பேச்சு? ஏசாண்டவர் மரித்தெழுந்தார்; ஆனால் மாடக்கண்ணுவால மரித்தெழ முடியுமா? இந்த கலாவதிப் பெண்ணால இனிமேல் சுய நினைவுக்கு வரமுடியுமா? வாய் வயிற்றைக் கழுவ வேலைக்குத்தான் போக முடியுமா?”
பாதிரியார், எல்லோரையும் சங்கடமாய் பார்த்த போது, மண்டையனின் டீக்கடை, தேங்காய் கடை வாய்க்குப் பயந்தவர்போல், அருணாசலமும் வீறாப்பாய் கேட்டார்.
“ஆமா, மண்டையன் சொல்றது மாதிரி, என் தம்பியை இனிமேல் என்னால் பார்க்க முடியுமா? தம்பி மகள் பழைய நிலைக்குத் திரும்பத்தான் முடியுமா? பேசாமல் கோர்ட்டுத் தீர்ப்புக்கு விட்டுடலாம். உப்பைத் தின்னவங்க தண்ணீரைக் குடித்துத்தான் ஆகணும்.”
பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா, பேரத்திற்குள் போனார்.
“நாங்களும் மனுசங்கதான். சும்மா விட்டுடுவோமா? கலாவதிக்கு தாமோதரன் அய்யா ஐயாயிரம் ரூபாய் கொடுத்திடணும்.”