பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நெருப்புத் தடயங்கள்

“என்னவே நீங்க... வந்ததும் வராததுமாய் சிபாரிசு கேக்கிய? தமிழு, வெள்ளிக் கிழம நிச்சய தாம்பூலத் துக்கு இருந்துட்டு காலேஜ் போறியா? இல்ல, கல்யாணம் வரைக்கும் இருக்கப் போறீயா?”

“காலேஜ்ல மாணவர் தேசிய சேவை திட்டமுன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு நான்தான் பொறுப்பு. வேல இருக்கு. நிச்சய தாம்பூலத்துல கலந்துகிட்டு, அப்புறம் மெட்ராஸ் போயிட்டு, கல்யாணத்துக்கு வரணும்.”

“ஏதோ ... என் மகன் பரீட்சை பேப்பர் அங்கேதான் வருமாம். நீதான்...”

“நீங்க பேசுறதைப் பார்த்தால், நான் எலெக்ஷன்ல நிற்கலாம் போலுக்கு...”

“எந்தெந்த கழுதையோ நிக்கும்போது, நீ ஏன் நிக்கப்படாது?”

ஊர்ப் பெரியவர்கள், ஒருவழியாகப் போய்விட்டார்கள். தமிழரசி, முந்தானையால் முகத்தில் வீசியபோது, பகவதி அம்மா வீட்டுக்குள் இருந்தே குரல் கொடுத்தாள்:

“வந்தது மத்தியானம் ரெண்டு மணி; இப்போ நாலு: மணி. முதல்ல உள்ள வா. குளிச்சுட்டு, சாப்புடப் போறியா? சாப்பிட்டுட்டு குளிக்கப் போறியா?”

அம்மா சொல்வது, சென்னையிலும் இதர நகரங்களிலும் இப்போது நடைபெறும் பட்டிமன்றங்களுக்கு, அருமையான தலைப்பு என்பது போல், பல பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளும் தமிழரசி ரசித்தபடி நின்றாள். பிறகு “குளிச்சுடுறேம்மா...” என்றாள்.

சமையலறைக்குள் இருந்து, சித்தப்பா மகள் கலாவதியின் குரல் கேட்டது:

“வெந்நி ரெடி...”