பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

நெருப்புத் தடயங்கள்


புதருக்கு அருகே, ஊனையும் உருக்கும் சத்தம் ஒன்று கேட்டது.

"எய்யோ ...ஓ...ஓ...ஓ .. எங்கேய்யா போயிட்டூரு?"

தாமோதரன், குதிகால்களை உயர்த்தி எட்டிப் பார்த்தான். இழவுக்கு நாயகியாகிப் போனவளை, அவனால் நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. அதே சமயம், அந்த இடத்தை விட்டு அவனால் அகலவும் இயலவில்லை. கண்ணடங்க, நாவடங்க, அவளை அவன் பார்த்தபோது-

சுண்ணாம்புச் சாந்து திட்டுத் திட்டாய் கிடக்க, தூள் தூளான வெள்ளைக் கலசம் ஓடு ஓடாய் சிதறிக் கிடக்க, உறை கழண்ட அழுக்குத் தலையணை போன்ற மண் சமாதியில், கலாவதி, சம்மணம் போட்டு உட்கார்ந்து, தலையை சமாதியில் சாய்த்துச் சாய்த்து எடுத்தாள். பிறகு மல்லாந்து பார்த்து வானத்தைப் பார்த்தாள். "எம்மோ...எம்மோ" என்று சொல்லிக் கொண்டாள்.

அந்தப் பிண மகளுக்கு, ஆகாயத்தில் அம்மாவின் குரல் கேட்டதோ என்னவோ, அம்மாவைப் பிடித்து, அவள் மூலம் அப்பாவைப் பிடிக்க நினைத்தவள் போல், வெண்குஷ்டம் வந்தது போன்ற வெந்துபோன உடம்பை ஆட்டி ஆட்டி, தோலுரித்த வள்ளிக்கிழங்கு போன்ற வாயை அகல விரித்து, அதல பாதாளத்தையும், ஆகாய வெளியையும் புலம்பல் குரலால் புடம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்தபடி நின்ற தாமோதரன் 'மணமகளே...மணமகளே...வா...வா' என்ற தன் வீட்டுப் பாட்டைக் கேட்டு, பல்லைக் கடித்தான். இதற்குள் எங்கிருந்தோ வந்ததுபோல் வந்த முத்துமாரிப் பாட்டி கலாவதியை தூக்கி நிறுத்தி, இடுப்போடு சேர்த்து இழுத்தபடி நடந்தாள்.