பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

233


தாமோதரன், ஆறு தலுக்காக அங்கே நின்ற பனைமரத்தைப் பற்றிக் கொண்டு அதன்மேல் சாய்ந்தான். அந்த மரமே சுழல்வது போலிருந்தது. என்னிடம் வராதே வராதே என்று விலகுவது போலிருந்தது. சின்ன வயதில், வேண்டுமென்றே வட்ட வட்டமாய் பம்பரம் போல் உடம்பைச் சுற்றி, அப்புறம் பொத்தென்று தரையில் விழும் போது, பூமி சுற்றுவது போலிருக்குமே. அதுபோல் இருந்தது அவனுக்கு இப்போது. அவன் வட்ட வட்டமாய் சுற்றாமலே, பூமி சுற்றியது. பனைமரம் சுழன்றது. நினைவுகள் நெஞ்சில் சுற்றின. நெஞ்சமோ தலையில் சுற்றியது. தாமோதரன் வந்த வழியாய் திரும்பப்போனான். முடிய வில்லை. கீழே விழாமல் இருக்க, எங்கேயாவது இளைப்பாற வேண்டும் போலிருந்தது. தள்ளாடி, அல்லாடி நடந்தான்.

அவனுக்கு முன்னால், முத்துமாரிப் பாட்டி, கலாவதியை உடலோடு சேர்த்துத் தூக்கியபடி போய்க் கொண்டிருந்தாள். ஊர் முனையில், கும்பல் கும்பலாக நின்றவர்களிடம், கலாவதியைக் காட்டிக் காட்டி, எதையோ பேசிக் கொண்டிருந்தாள், தாமோதரன் அவர்களை நெருங்கியபோது, பாட்டிக்குக் காது கொடுத்தவர்கள், இன்ஸ்பெக்டரைப் பார்த்து விட்டு, முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள். போலீஸ்காரனுக்கு-அதுவும் அதிகாரிக்கு உடம்பைக் காட்டலாம். முகத்தைக் காட்ட லாமோ? தங்களை அடையாளப் படுத்திக் கொண்டால், அப்புறம் அடையாளம் இல்லாமல் போக வேண்டியது வருமே,

பேச, முகம் கிடைக்காமல் நின்ற முத்துமாரிப் பாட்டி, உடம்பைத் திருப்பினாள். தாமோதரனைப் பார்த்து விட்டு, ஆச்சரியப்பட்டு மோவாயில் கை வைத்தாள். இதுவரை பேசாமல் வந்த கலாவதியோ, அவனைப் பார்த்ததும், "எய்யோ ...எய்யோ ..." என்று சொல்லியபடியே ஓடப் போனாள். பாட்டி, அவளை இழுத்துப் பிடித்தபடியே, தாமோதரனை வழிமறித்துக் கத்தினாள்.