பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

241


தாமோதரன், தந்தையையே பார்த்தான். அவர் முகத்தில், பிரகலாதனைக் கொல்லப் போன இரணியன் முகம் தென்பட்டது. பெரிய மனிதர்களைப் பார்த்தான். அவர்களோ, ஒருவரை ஒருவர் பார்த்து இளக்காரமாய் கண்ணடித்துக் கொண்டார்கள். தங்கை விஜயாவை, பார்த்தான். அவள், அவன் கைகளை, தன் கைகளில் கோர்த்தபடி விம்மிக் கொண்டிருந்தாள். கூட்டம், ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது,

தாமோதரன், தங்கையின் கையை மெல்ல விலக்கி, சுவரோடு ஒட்டிக் கிடந்த சூட்கேசைத் தூக்கியபடி, மெல்ல நடந்தான். எவரும் அவனை, 'இரு' என்று சொல்லவில்லை. ஏனென்று கேட்கவில்லை. வீட்டுக்கு வெளியே வந்தவன் காதுகளில்,"அண்ணாச்சி அண்ணாச்சி.... அய்யோ.... என்னோட அண்ணாச்சியை கூப்பிடுங்க..." என்று விஜயா கூப்பாடு போடுவது கேட்டது. தாமோதரன், தங்கைக்காக ஒரு கண்ணையும், தனக்காக இன்னொரு கண்ணையும் துடைத்துக் கொண்டான்.

ஊர் வழியாய் நடக்க மனம் கேட்காமல், காட்டுப் பாதையில் நடந்தான். தனி வழியாய் தனித்துப் போனான். தந்தை என்பதும், தமையன் என்பதும் என்ன? தங்களால், இனிமேல் சுயேச்சையாக வாழ முடியாது என்ற சுயநலத்தால் துரத்துகிறார்கள். பாசம் என்பது உறவின் கைதி. இந்த சிறைபட்ட-சிறை பிடித்த மனிதர்களுக்காக, நான் ஏன், என் இதயத்தை வீங்க வைக்க வேண்டும்? போலீஸ் அதிகாரிகளிடம் போய், இதுவரை நடந்த கொலை நிகழ்ச்சிகளுக்கு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் என்ன? அவர்களிடம் சரணடைந்தால் என்ன?

தாமோதரன், கால்போன போக்கில் நடந்தான். மனம் போன போக்கில் நினைத்தான்.

நெ-16