பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


23

ந்தக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளும், ஆசிரியைகளும் கும்பல் கும்பலாய் கூடிக் கூடி நின்றனர். வயதுக்கேற்ற சேட்டைகளோ, பருவத்திற்கேற்ற 'கலாட்டாக்களோ' இல்லாமல், மவுன கழிவிரக்கத்தில் கரைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றினார்கள். பல பெண்கள், கரங்களில் அட்டைகள் ஏந்தி முகங்களில் சோகம் கப்பி நின்றார்கள்.

தமிழரசியும், பத்மாவும், இன்னும் ஒருசில ஆசிரியைகளும், தனித்தனியாய் தத்தம் குழுக்களுடன் பேசிக் கொள்ளாமல், பிரிந்து செல்லாமல் நின்ற பெண்களை, கல்லூரி கொடிக் கம்பத்திற்கு முன்னால் வந்து நிற்கும்படி சைகை செய்தார்கள். இதைப் பாராமுகமாய் நின்ற பல பெண்களை, பார்த்த முகமாய் நின்ற பெண்கள் விலாவில் இடித்து, எல்லோரும் கொடிக் கம்பத்தின் முன்னால் குவிந்தார்கள்.

தமிழரசியும், சமூகஇயல் உதவிப் பேராசிரியை பத்மாவும் அவர்களை மூன்று மூன்று பேராய் பிரித்து, வரிசைப் படுத்தினார்கள். மூன்று அணிகளுக்கு ஒரு அணி வீதம், மாணவிகள் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். அத்தனைப் பெண்களின் தோள் களில் துவண்ட முந்தானை களில், கருப்புத்துணிகள் குத்தப்பட்டு, அவைகளும் துக்கித்து நின்றன. ஊர்வல வரிசையின் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும், மத்தியிலும்-பலப்பல விதமான அட்டைகள் கம்பீரமாய், தலைகளுக்கு மேல் தாவி நின்றன. அவற்றில் எழுதப்பட்டிருந்த முழக்கங்கள், மவுனமாய் நின்ற மாணவிகளை சீறும் பெண் புலிகளாகக் காட்டின. கரங்கொண்ட அட்டைகள்,

"எங்களவர்களைக் கொல்லும் சிங்களவர்களே!-உங்களை என்ன ஆனாலும் விடோம்."