பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

நெருப்புத் தடயங்கள்


கிறதா என்பதை, எவ்வளவு முயன்றும் இன்னும் அவளால் அறிய முடியவில்லை.

தமிழரசி, பேனரின் ஒரு முனையை என். ஸி, ஸி. மாணவியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு முனையை அந்த இலங்கைத் தமிழ்க்காரியிடம் நீட்டினாள். ஆனால் அந்த மாணவியால் அதை வாங்க முடியவில்லை. அப்படியே குனிந்து உட்கார்ந்து விம்மினாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக தமிழரசியும், ஒரு சில மாணவிகளும் அவளிடம் ஓடியபோது, அவளும் ஓடி, கூட்டத்திற்கு முன்னால் வந்தாள். கூட்டத்தைப் பார்த்து, கரங்கூப்பித் தொழுதாள். இலங்கையில் தனது குடும்பத்தைத் தொலைத்து விட்டாலும், தமிழகத்தில் தான், தன்னைப் போன்றவர் களுக்கான மிகப் பெரிய குடும்பத்தைக் கண்ட பாசபந்தத்தில், கட்டுண்டு கண்ணீர் விட்டாள்.

இங்கிருக்கும் தமிழர் ரத்தம், இந்து மகா சமுத்திரத்தையும் ஊடுருவி, அங்கிருக்கும் தமிழ்க் குருதியுடன் இணைந்து துடிக்கும் அன்பின் ஈர்ப்பில், அவள் ஆடிப் போனாள். அத்தனை பேரும், அவளுக்கு உடன் பிறவா சகோதரிகளாக-அவளைப் போன்றவர்களுக்காக, எந்தத் தியாகத்தையும் செய்யலாம் என்ற எண்ண முனைப்புடன் வந்திருக்கும் தமிழ்க் குடும்பமாக - அவளுக்குத் தோன்றியது.

மின்னும் கறுப்பில் நிறமெடுத்து, எண்ணமும், செயலும் ஒன்றாகவே உடலெடுத்தது போல், விகற்பம் இல்லாத பளிங்குப் பார்வையும், வஞ்சமற்ற வளர்ச்சியும், எழிலும் கொண்ட அந்த இலங்கை மாணவியின் தோளை, தமிழரசி தட்டிக் கொடுத்தாள். "கவலைப்படாதே! இன்னிக்கு இலங்கை அஸிஸ்டெண்ட் ஹைகமிஷனர் கிட்டே, ஒன்னோட குடும்பத்தின் விவரத்தைக் கண்டு பிடிச்சு சொல்லச் சொல்லுவோம். அவங்க தராட்டால், நானே சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்," என்றாள்.