பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

245

உடனே அந்த மாணவி, தமிழரசியின் தோளில் சாய்ந்து விம்மினாள். அதைப் பார்த்து விட்டு ஊர்வலத்தில் சங்கிலித் தொடராய் நின்ற அத்தனை பெண்களும் அழுதார்கள். தோளிலே புரண்ட அந்த மாணவியை, குழந்தை மாதிரி அணைத்துக்கொண்ட தமிழரசிக்கு, இலங்கைத் தமிழர்கள் பட்ட- படுகின்ற- ஒரு வேளை படப்போகின்ற துன்பங்களும், துயரங்களும், துக்கப் பெருங்கடலாய் உருவமெடுத்து, மூழ்க வைத்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் யார், யார், எவையெவை காரணங்கள்?

அவளுக்கு தான் இதுவரை கலந்து கொண்ட பட்டிமண்டபங்களும், கவியரங்கங்களும் வெத்து வேட்டுக்களாய் தெரிந்தன. இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைக்குத் தானும், தன்னைப் போன்றவர்களும், ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை அறிந்து நிமிரமுடியாமல் நின்றாள். கண்களை மூடியபடியே நின்ற தமிழரசியை, பத்மா உலுக்கினாள். இதற்குள் நான்கைந்து மாணவிகள் வந்து இலங்கை மாணவியை ஆற்றுப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.

கண் விழித்த தமிழரசியால், ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொடிக்கம்ப மேடையில் ஏறினாள். பிறகு "இலங்கையில் விதவையாக்கப்பட்டவர்களுக்கும், அனாதைகளான சிறுவர் சிறுமிகளுக்கும், கற்பழிக்கப்பட்ட பத்தினிகளுக்கும், கொலையுண்ட தமிழர்களுக்கும், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்துவோம்" என்றாள்! அத்தனை கண்களும் மூடின. அத்தனை தலைகளும் முன்புறமாய்ச் சாய்ந்தன. இரண்டு நிமிடமாகியும் எழாமலே கிடந்தன. எப்படியோ அவை நிமிர்ந்தபோது, தமிழரசி மேடைப் பேச்சாளியானாள்.

"என் அன்புச் சகோதரிகளே!

இலங்கையில் இனப்படுகொலையை, நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை, சுருக்கமாகச் சொல்வ-