பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

249


அந்த மாணவியின் அருகே போய் அவள் கையைப் பிடித்தபடி "என்னை மன்னிச்சிடுடா. உன்னிடம் தனியாய் பேச வேண்டியதை, பகிரங்கமாய் கேட்டது தப்புத்தான். வேகமாய் பேசுறதாலயே, ஒருத்தர் வீரமுள்ளவர்னோ விவேகம் உள்ளவர்னோ ஆயிடாது. நான் தான் அப்படி ஆயிட்டேன்" என்று எல்லோருக்கும் கேட்கும்படியாய் சத்தம் போட்டு மன்னிப்புக் கேட்டாள்.

மாணவிகள் முன்புறமாய் திரும்பினார்கள். பானர் பிடித்த மாணவிகள் முன்னால் நடக்க, ஊர்வலம் கல்லூரி வாசலைத் தாண்டி சாலையோரமாய் நடந்தது. கை பிடித்த அட்டைகள் மேலோங்க, கழுத்துப் பிடித்த தலைகள் கீழோங்க மவுன ரதமாய் ஊர்வலம் நடந்தது. தமிழர்கள் சிதறிய குருதிபோல் சிவப்புப் புடவைகளும், கற்பழிக்கப்பட்ட தமிழ் மாந்தர் கண்கள் போல் வெளுத்த தாவணிகளும், நம்மவர்கள் எரிந்து கரியாய் போனதைப் போன்ற கறுப்புத் துணிகளுமாய் ஊர்வலம் இலங்கைத் தூதரகம் உள்ள இடத்திற்கு வந்தது.

விடுதிக்குச் செல்வதற்காக, பஸ் நிலையத்தில் காத்து நின்ற தமிழரசிக்கு ஒரே அலுப்பு. பத்மா கல்லூரிக்கு பேனர்களை வைக்கப் போய் விட்டாள். கடந்த பத்து நாட்களாக கல்லூரி ஆசிரியர்கள் சார்பாக உண்ணாவிரதம் என்றும், உழைக்கும் பெண்கள் சார்பாக ஊர்வலம் என்றும், விடுதிப் பெண்கள் சார்பாக நன்கொடை வசூலிப்பு என்றும், இரவு பகல் பாராமல் செயல்பட்ட தமிழரசி, தன்னையும் தன் பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளினாள்.

ஏதோ ஒன்றைத் தன்னளவில் செய்த திருப்தி இருந்தாலும், அவளால் நிற்கமுடியவில்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு விடுதிக்கு வந்தாள். விடுதியின் வரவேற்பறைக்குள் அவள் வந்தபோது-

உட்கார்ந்திருந்த தாமோதரன், எழுந்து நின்றான்.