பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


24

தாமோதரனைப் பார்த்தபடியே நின்ற தமிழரசிக்கு, பத்து நாட்களாக ஒழிந்து விட்டதாக அவளே நினைத்த பழைய நினைவுகள் பிடித்துக் கொண்டன. அவள் நின்ற இடம் ஊர் போலவும், காதல் கிணறு போலவும், கட்ட விழ்த்து விடப்பட்ட கொடுமைகள் நிலவிய சித்தப்பாவின் வீடு போலவும், மாறி மாறித் தோற்றம் காட்டின. ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்தபடி கால்களை நகர்த்திக்கொண்டார்கள். இறுதியில் மூன்றடி இடைவெளியில் இருவரும் நின்றார்கள். தமிழரசி பேசப்போனாள். வார்த்தைகளை வாங்கிக் கொள்ளும் முன்னாலேயே வாய்க்குள் விம்மல் வந்தது. லாவகமாக புறங்கையால் கண்களைத் தேய்த்த படி அவனைப் பார்த்து சோகமாய் புன்னகைத்தாள். பிறகு தான் கண்கள் வெளுக்க,மோவாயின் முன்பகுதி துக்கத்தை அனுசரிப்பது போல தளிர்விட்ட ரோமக் கணைகளாக அவன் தவித்து நிற்பதைப் பார்த்தாள். அவனும் ஏதோ பேசப் போனான். முடியவில்லை. மோவாயில் கை வைத்து விரல்களை வாயில் பரப்பிக் கொண்டாள்.

இதற்குள் அங்குமிங்குமாய் நின்ற பெண்கள் அவர்கள் இருவரையும் விநோதமாகப் பார்த்தார்கள். 'தமிழரசியா' என்று வினாவோடு பார்த்து, நல்ல ஜோடிதான் என்ற விடையோடு தலையை ஆட்டிக் கொண்டார்கள். அவர்கள் காதலர்கள் தான் என்பதை அந்த "அனுபவசாலிப்" பெண்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். கண்களைச் சுற்ற விட்ட தமிழரசி சுதாரித்தாள். "எப்போ வந்தீங்க" என்றாள். அவன் "இப்போதான்" என்று சொல்வதற்கு முன்பாகவே "வாங்க, வெளில போய் பேசலாம்" என்றாள்.

இருவரும் அந்த விடுதிக்கு வெளியே வந்து சாலையோரமாய் நடந்தார்கள். தாமுவிற்கு முன்னால் நடந்த தமிழ்,