பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

நெருப்புத் தடயங்கள்


"இந்தா பாருங்க தாமு, எப்படியோ ஒங்க அண்ணாவாலயும், போதாக்குறைக்கு பொன்மணி வினைதீர்த்தானாலயும், நாம் எல்லோருமே கஷ்டப்பட்டுட்டோம். தெரிஞ்சும் தெரியாமலும் நாம் ரெண்டு பேருமே தப்பு செய்திருக்கலாம். போனது போகட்டும். முன்பு, பார்க்கிறதுக்கு டிப்டாப்பாய் இருக்கும் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கையில் இப்போகூட எனக்கு அழுகை வருது. நாளைக்கு நீங்க பழைய தாமோதரனாய் வரணும்."

"பழைய தாமோதரனைப் பார்க்கத்தான் போறே."

"குட்... நல்லது."

"குட்டோ... பேடோ... நல்லதோ... கெட்டதோ..."

ஒரு பூக்காரச் சிறுமி தட்டோடு வந்தாள். தமிழரசி, தாமுவை செல்லச் சிணுங்கலில் அதட்டினாள்.

"பூக்காரப் பொண்ணப் பாருங்க."

தாமோதரன் பார்த்தான். கேட்டான்.

"ஏய்...போ...போ... பூ வாங்குற நிலைமையில இல்ல.... சமய சந்தர்ப்பம் தெரியாமல்..."

"அய்யோ... அய்யோ... அவளை நான் விரட்டச் சொல்லல. ஒங்க கையால என் தலையில..."

தமிழரசியால் பேச்சைத் தொடர முடியவில்லை. நாணத்தோடும், பொய்க் கோபத்தோடும் அவனைப் பார்த்தாள். 'ஒன் தலையில தான் ஒரேயடியாய் கை வச்சுட்டேனே...' என்று உள்ளூறப் புலம்பிய தாமோதரன், மனிதச் செடிபோல் ஒதுங்கி நின்ற பூக்காரச் சிறுமியிடம், மூன்று முழம் பூ வாங்கினான். தமிழரசி, நாணத்தால் சிரித்து அவன் கரத்திற்குக் கீழே, தன் தலையைக் குனிந்த போது, தாமோதரன், உள்ளத்துப் புலம்பலில் ஒடுங்கிப் போய், கதம்பப் பூவை, அவள் தலையில் சூடினான்.. அதையே கழுத்தில் விழுந்த தாலியாகப் பாவித்த தமிழரசி, தன்பாட்டிற்குப் பேசிக் கொண்டிருந்தாள்.