பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

285

திடீரென்று அவர்கள் இருவரையும் பற்றிக்கொண்டு. ஓலமே ஒலியாக, அழுகையே அவலமாகக் கத்தினாள்.

“இதுக்கெல்லாம் நானே காரணம். சித்தப்பாவையும், கலாவையும் ஓநாய்க்கு காவு கொடுக்கது மாதிரி விட்டுட்டு ஓடிப்போன படித்த முட்டாள் நான். வினைதீர்த்தான், இந்தப் பாவியை அரிவாளால ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுடு.”

தமிழரசியின் அழுகை, அனைவரையும் உலுக்கியது. முத்து மாரிப்பாட்டி, கூப்பாடு போட்டாள். தாய்மார்கள், தாங்க முடியாமல் அழுதார்கள். கில்லாடியார், தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். மண்டையன் துண்டால் தன் வாயை அடைத்துக் கொண்டான். வினைதீர்த்தானின் ஏழை பாழை பங்காளிகள் தலை கவிழ்ந்து, நீர் சொறிய நின்றார்கள். தமிழரசி, மீண்டும். “என்னை அரிவாளால வெட்டிப் போட்டுடு” என்று கத்தினாள்.

வினைதீர்த்தான், தமிழரசியை விழுங்கப் போகிறவன் போல் பார்த்தான். ‘அரிவாள்’ அவனுள் ஒரு ஆவேசத்தை ஏற்படுத்தியது. கூட்டத்தை நெருக்கியடித்து, நார்க், கட்டிலுக்குள் குனிந்தான். பளிச்சிட்ட பாளை அரிவாளை எடுத்தபடி நிமிர்ந்தான். பெண்கள் பயந்துபோய். ஒதுங்கினார்கள். அவன் கர்ஜித்தான்:

“இதுக்கெல்லாம் காரணமானவங்களோட தலைகளை வெட்டி, என் கலா காலுல கொண்டு வந்து போடாமல், நான் திரும்பமாட்டேன். உ.ம்... வழி விடுங்க...”

பெண்கள், வழி விட்டார்கள். தமிழரசி, அவனைத் தடுப்பாள் என்ற எதிர்பார்ப்போடும், தடுக்க வேண்டும். என்ற எண்ணத்தோடும் பார்த்தார்கள். அவளோ, அவன் செய்யப் போவது நியாயம் என்பதுபோல் பேசாமல், நின்றாள். லேசாக அவனுக்கு வழிகூட விட்டாள்.