பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

நெருப்புத் தடயங்கள்


வெளியே வந்து ஆவேசமாக ஓடப்போன வினைதீர்த்தானை சிலர் பிடித்தார்கள். அவளோடு சேர்ந்து செல்வதற்குத் தயாராகி பங்காளிகள் சிலர் உலக்கைகளையும், அம்மிக் கல்லையும் எடுக்கப் போனார்கள். கில்லாடியார் வினைதீர்த்தானின் இடையைப் பிடித்து எகிறியபடியே பேசினார்.

“ஏய் வினை, ஒன்னால இவ்வளவு நடந்தது போதாதா? இன்னுமா நடக்கணும்? நீ ஜெயிலுக்குப் போயிட்டால் ஒன் பைத்தியார தங்கச்சியையும், ஒன்னையே நம்புற பொன்மணியையும் யார்டா காப்பாத்துறது? மடையா... மடையா... நில்லுடா. சொன்னால் கேளுடா...”

வினைதீர்த்தான், கில்லாடியாரையும் தூக்கிக் கொண்டு, பாளை அரிவாளோடு பாயப்போனான். அவன் அரிவாள் முனை, அவர் விலாவை இடித்ததால், அவர் இப்போது தற்காப்பை முன்னிட்டும், பலமாகக் கத்தினார்.

“தமிழரசி, இங்கே ஓடிவாம்மா. ஓடிவா! இது கொலையில முடியப் படாது. கொலைகாரங்க ஜெயிலுல முடியும் படியாய் முடியணும். வாம்மா, வந்து இந்தப் பயலுக்குச் சொல்லும்மா.”

தமிழரசி நிதானமாக வந்தாள். கில்லாடியாரை கீழே தூக்கிப் போட்டுவிட்டு, அனுமான்போல் அரிவாளுடன் பாயப்போன வினைதீர்த்தான் முன்னால் வந்து நின்றாள். அவன் ஓங்கிய அரிவாளை பிடித்தாள். உடனே, வினைதீர்த்தான், கையடங்கி மெய்யடங்கி அரிவாளை தூரே எறிந்து விட்டு அவளைக் கட்டிப் பிடித்தபடி “நான் இப்படி நடக்குமுன்னு நினைக்கலியே தமிழு” என்று குழந்தை போல் கேவனான்.

கில்லாடியாரை யாரோ தூக்கிவிட்டார்கள். தூசிகளைத் தட்டிவிட்டபடியே, தமிழரசியின் முன்னால் வந்து தழுதழுத்த குரலில் பேசினார்.