பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம்

29

தாமோதரன் எங்கேயோ எட்டிப் பார்த்தான். பிறகு "கலாவதி, மாலைப் பதனி நல்லா இருக்கும். அதோ ராமசுப்பு தாத்தா பனந்தோப்புல, ஒரு மரத்துல தொத்துறார் பாரு, போய் வாங்கிட்டு வா... அப்படியே நொங்கும் கேளு...” என்றான்.

“ஆமாம் கலா... பதனிக்கும், நொங்குங்கும் நல்ல பொருத்தம். டேஸ்டாய் இருக்கும்” என்றாள் தமிழரசி.

இருவருக்கும் தற்காலிகமாய் பிடிக்காமல் போன கலாவதி, வேண்டா வெறுப்பாகப் புறப்பட்டாள். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள். பாதி தூரத்தை அவள் கடந்தபோது, ஓங்கிய பனை ஒன்றில், மார்பில் தோல் கவசத்துடன் காலில் பனைநார் தளையோடு தவளை மாதிரி கிடந்த ராமசுப்பு தாத்தா, "இரும்பு அடிக்கிற இடத்துல ஈய்க்கு என்ன வேல? சீக்கிரமாய் வாபிள்ள" என்று சொன்னபடியே, "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்று பாகவதரானர்.

தனித்து விடப்பட்ட தாமோதரனும், தமிழரசியும், ஒருவரை ஒருவர் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் பார்வை இன்னொருவர் பார்வையில் முட்டும்போது, அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவன் முகத்தைக் கோணலாக ஆக்கிக் கொண்டான். பிறகு, இருவருமே சேர்ந்தாற்போல் பேசப் போனர்கள் அப்புறம் சிரித்துக் கொண்டார்கள். தமிழரசியே பேசட்டும் என்பதுபோல், தாமோதரன், தன் வாயில் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டான். தமிழரசியே முந்தினாள்.

"போலீஸ் வேலையில சேர்ந்த பிறகு, நீங்க ஊரையே மறந்துட்டிங்களாமே. எல்லோரையுமே மறந்துட்டிங்களாம்."

“நான் ஊரையும் மறக்கல, உறவையும் மறக்கல. இதை நிரூபிக்க, ஒரே ஒரு இன்ஸிடெண்ட் சொல்லுறேன்