பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னும் அடிகளைப்படிக்கும்போது நமது உள்ளம் உருகுகிறது. கண்ணீர் பெருகுகிறது. நேருவின் இளகிய நெஞ்சம் கண்ணெதிரே நிற்கிறது. ‘அன்று முதல் துப்பாக்கிதனைத் தொடமாட்டேன்' என்று சத்தியம் செய்து இறுதி வரையில் தமது சொல்லைக் காத்தனர்’ என்று கவிஞர் உருக்கமாகப் பாடியுள்ளார்.

இவ்வளவும் பாடிய கவிஞர் நகைச்சுவையையும் விட்டுவிடவில்லை. டில்லிக்குப் போன சிறுவன், நேரு மாமாவைப் பார்த்து சல்யூட் அடித்தாலும் யானைவேண்டும்’ என்றானாம் நேரு அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து யானைப் படம் வரைந்து, சிறுவனிடம் கொடுத்தார். சிறுவன் பக்கெனச் சிரித்தான். ஜவஹர் சிறுவனப் பார்த்து,

யானை நீ கேட்டாய்; அன்புடன் தந்தேன்
தீனியே வேண்டாம்; செலவுமே இல்லை.
அடக்கமாய் இருக்கும்; அங்குசம் வேண்டாம்
மடித்து நீ பைக்குள் வைத்திடு,” என்றார்

படத்தை வாங்கிய சிறுவன்,

"தலைவர் தந்தார் தங்கக் கையால்
விலைக்கா வேண்டும்? விற்கவே மாட்டேன்”

என்று மார்தட்டிப் பெருமைப்படுகிறான்.

இப்படியெல்லாம் குழந்தை நண்பரைப்பற்றிக் குழந்தைக் கவிஞர் அவர்கள் எழுதிய இந்தப்புத்தகம் சிறுவர் சிறுமியர்க்குக் கிடைத்த ஒரு மாணிக்கப் புதையலாகும். இந்நூல் குழந்தைகளிடையே தேசபக்தியையும் நல்லொழுக்கத்தையும் வளர்ப்பதாகும். குழந்தைகளுக்குச் செய்யும் தொண்டு தேசத்துக்குச் செய்யும் சேவை; தெய்வத்துக்குச் செய்யும் திருப்பணி. இப்பணியினையே தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்ட வள்ளியப்பா அவர்கள் மேலும் பலப் பல குழந்தை இலக்கியங்கள் இயற்றி நீடுழி வாழ்க! வளர்க! வெல்க! விளங்குக! என அகம் குளிர-முகம் மலர வாழ்த்துகின்றேன்.

நேரு தந்த பொமையினே நித்தம் விரும்பிப்படிப்பவர்கள் பாரில் சிறந்த பண்புடனே-பலவளம் பெற்றே வாழ்குவரே!

சென்னை

தணிகை உலகநாதன்

1-11-1977