பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245


"வேலை கொடு அல்லது சோறுகொடு!"

மீண்டும் அந்த கோஷம் அவனைக் குலுக்கி உலுக்கியது; அவன் தன் பசி வேதனையையே மறந்து விட்டான். அந்தக் கோஷம் அவனது தொய்ந்து தொள தொளத்துக் கிடந்த நரம்புகளுக்குப் பகை தீட்டி முறுக்கேற்றுவது போலிருந்தது. தாது விழுந்து படுத்துக்கிடந்த நாடித் துடிப்பைத் தட்டியெழுப்பித் துடி துடிக்கச் செய்தது; இதய மண்டலத்தின் அஷ்ட கோணங்களையும் ஆக்கிரமித்துக் கவிந்து நின்ற இருட் செறிவைப் பிளந்தெறியும் மின்னல் சொடுக்கைப்போல் அந்தக் கோஷம் பளீரென ஒளி வீசியது; சூனிய வெளியாக, வெற்றம்பலமாகக் கிடந்த அவன துசித்த அரங்கிலே, திடீரென்று ஒரு இதய நிறைவு மானாவாரியாய் வர்ஷித்துப் பெருகியது.

"வேலைகொடு அல்லது சோறு கொடு!"

திடீரென்று முறுக்கேறி விறைத்த இதயத் தந்தியில் அந்தக் கோஷம் மோதி மோதி ஏதோ ஒரு இன்ப நாதத்தை இசை மீட்டி எழுப்புவது போல் அவன் உணர்ந்தான். அந்த நாதம் அவன் உதட்டை அசைத்தது; உடலை அசைத்தது; உள்ளத்தை அசைத்தது. உலர்ந்து பொருக்காடிப் போன அவன் உதடுகள் அந்தக் கோஷத்தை முணுமுணுத்தன. வற்றி வறண்ட தொண்டைக்குழி அந்தக் கோஷத்தை வெளியிட முயன்று கரகரத்தது.

ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது.

காந்த ஊசி அருகில் வந்ததும் துள்ளித் தாவிப்போய் ஒட்டிக் கொள்ளும் இரும்புத் தூளைப் போல், பல பேர் அந்த ஊர்வலத்தோடு சங்கமமானார்கள். அந்த மனிதப் பிரவாகத்தின் ஆகர்ஷண சக்தி அவனையும் கவர்ந்து. இழுத்தது; அவன் கால்கள் அவனையுமறியாமல் இடம் பெயர்த்தன.

"வேலைகொடு அல்லது சோறுகொடு!"