பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302


கீழும் நிலையற்று நடந்து கொண்டிருந்தார் தாதுலிங்க முதலியார்.

'தர்மாம்மாள் அவரருகே மெதுவாகச் சென்று நின்றவாறே, "என்ன விஷயம்? என்ன நடந்தது?" என்று மெல்லக் கேட்டாள்.

தாதுலிங்க முதலியாரின் முகம் குபீரென்று சிவந்து கனன்றது; உதடுகள் கோபாவேசத்தால் படபடத்துத் துடித்தன.

"என்ன நடந்ததா? அந்தப் பயல் மணி வந்து சேர்ந்துட்டானாம். அவன் வீட்டிலே வேலை பார்த்தானே, அந்தக் கோனார் மகன், அந்தப் போக்கறுவானும் வந்துட்டானாம். இந்த ரெண்டு பயலுகளுமாச் சேர்ந்து கிட்டு, கூட்டத்திலே, 'பப்ளிக்' மேடையிலே, என்னைத் தாறுமாறா, கிழி கிழின்னு கிழிச்சிருக்கானுக. இந்தக் கூட்டத்துக்கு நம்ம வீட்டுக் கொள்ளி தலைமை வகிச்சிதாம்! இப்பத்தான் அந்தச் சுப்பையா வந்து எங்கிட்ட சொல்லிட்டுப் போனான்!" என்று அனல் கக்கும் குரலில் சீறிப்பொருமினார் தாதுலிங்க முதலியார்.

"இதுக்குத்தானா? என்னமோ சின்னப் புள்ளைக_" என்று கூறித் தன் கணவனைச் சமாதானப்படுத்த முனைந்தாள் தர்மாம்பாள்.

"என்ன சொன்னே? சின்னப் புள்ளைகளா? நினைச்சா நெஞ்சுகொதிக்குது! இந்தத் தறுதலைப் பயலுக்குக் கொண்டு போய் உன் மகளைக் கட்டிக் குடுக்கணும்னு தாயும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்து பேசினீங்க! எனக்குன்னு வந்து பிறந்தானே, அந்தத் துடைகாலி சங்கர் அவனை என்ன பண்ணினாத் தேவலை. "தாதுலிங்க முதலியார் தம் மகனை எண்ணித் தமக்குத் தாமே பொருமிவிட்டு, மனைவியிடம் திரும்பிக் கேட்டார்.

"சங்கரை எங்கே? அவன் இன்னம் வரலியா?"