பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

பஞ்ச தந்திரக் கதைகள்

‘இன்று வரை நாம் இந்த நீர் நிலையைச் சுற்றியுள்ள இடத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தோம். இன்று நம் சுதந்திரத்திற்குக் கேடுவந்தது போல் இந்த யானைகள் வந்து சேர்ந்தன. இனி நாம் இங்கு முன்போல் உரிமையோடு கவலையில்லாமல் நடமாட முடியாது. வேறோர் இடத்திற்குப் போகலாம் என்றால், நமக்குத் தகுந்த இடம் எதுவும் இல்லை. மேலும் இந்த இடத்தில் நாம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இதைவிட்டுப் போகாமல் இருக்கவும், அந்த யானைகளை இவ்விடத்தினின்று அகற்றவும் நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டும்’ என்று அரச முயல் கேட்டது.

அந்த அமைச்சர்களிலே மிகவும் திறமை வாய்ந்த வெள்ளை முயல் ஒன்று உடனே எழுந்து, ‘அரசே, இந்த யானைகளை வெல்வது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. தாங்கள் விடை தாருங்கள். நான் இப்போதே புறப்பட்டுப் போய் வெற்றியோடு திரும்பி வருகிறேன்’ என்றது.

அவ்வாறே அரச முயல் அந்த வெள்ளை முயலை ‘வெற்றியோடு திரும்பி வருக' என்று வாழ்த்தியனுப்பியது.

வெள்ளை முயல், தங்கள் மறைவிடத்தை விட்டுப் புறப்பட்டது. வேழக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது. தொலைவில் அந்த யானைகளைக் கண்டபோதே அதற்கு மன நடுக்கம் ஏற்பட்டது.