பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

பஞ்ச தந்திரக் கதைகள்


எப்பொழுதும் அமைச்சருடைய சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் அரசன் உடனே கூண்டைத் திறந்து அந்தப் பறவையை விடுதலை செய்து விட்டான்.

விடுதலையான அந்தப் பறவை உடனே நேராக அரண்மனைக் கோபுரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு எல்லோருக்கும் கேட்கும் படியாக.

'வேடனிடம் தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட நான் முதல் மூடன். என்னை அடைந்தும் இழத்து விட்ட வேடன் இரண்டாம் மூடன். அது போலவே என்னை விட்டுவிட்ட அரசன் மூன்றாம் மூடன். அவனுக்கு யோசனை சொன்ன அமைச்சன் நான்காம் மூடன்!' என்று இரைந்து கூறியது.


பகைவருக் கிரங்குவதால் பழிவந்து சேரும்.