பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ்வு தந்த கிழட்டு வாத்து

69


அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்தக் கொடி இலேசாகப் படரத் தொடங்கியது. அதைக் கண்ட ஒரு கிழட்டு வாத்து மற்ற வாத்துகளைப் பார்த்து, இந்தக் கொடி, மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிப் படருமானால் நமக்கு ஆபத்து ஏற்படும். யாராவது இதைப் பிடித்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து, நம்மைப் பிடித்துக் கொன்றுவிடக் கூடும். இப்பொழுதே நாம் இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்று சொன்னது.

ஆனால் மற்ற வாத்துக்கள் அந்தக் கிழட்டு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. 'இது என்ன வேலையற்ற வேலை’ என்று அலட்சியமாகப் பேசி விட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்து விட்டன. அந்தக் கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்டு மரத்தைச் சுற்றிப் படர்ந்தது.

'ஒரு நாள் எல்லா வாத்துக்களும் இரை தேடப் போயிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேடன் அந்த வாத்துக்களைப் பிடிக்க நினைத்தான். மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக அதன் மேல் ஏறினான். ஏறிக் கண்ணி வைத்து விட்டு இறங்கிச் சென்று விட்டான்.