பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்வு தந்த கிழட்டு வாத்து

71

வாத்துக்களும் செத்ததுபோல் சாய்ந்து விட்டன. மரத்தின் மேல் ஏறிப்பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன என்றே எண்ணினான். உயிருள்ள வாத்துக்களாயிருந்தால் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பான். ஆனால், அவை செத்த வாத்துக்கள் தானே என்று கால்களைக் கட்டாமலே,கண்ணியிலிருந்து எடுத்துத் தரையில் போட்டான்.

ஒவ்வொன்றாக மரத்தின் மேலேயிருந்து தரையில் வீழ்ந்ததும் அவை வலியைப் பொறுத்துக் கொண்டு செத்த மாதிரியே கிடந்தன. எல்லா வாத்துக்களையும் அவன் கண்ணியிலிருந்து எடுத்துக் கீழே போட்டு முடித்தவுடன், கீழே இறங்கினான்.

அவன் பாதி வழி இறங்கும்போது, கிழட்டு வாத்து குறிப்புக் காட்டியது. உடனே எல்லா வாத்துக்களும் படபட வென்று அடித்துக் கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக் கொண்டன.

வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.

அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும் உள்ள பெரியோர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் எப்போதும் நன்மை யுண்டு.