பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 2


நட்பு உண்டாக்குதல்


1. நான்கு நண்பர்கள்


தெளிவான நீர் ஓடும் கோதாவரிக் கரையில் ஓர் இனிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் இலவமரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது!

ஒரு நாள் விடியற்காலையில் அந்தக் காகம் தன் இனத்துடன், ஒரு குளத்தில் போய்க் குளித்து, சிறகுகளைக் காய வைத்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு வேடன் வந்து சேர்ந்தான். அவன் தன் கைகளில், வலையும், வில்லும், அம்புகளும் வைத்திருந்தான். வேட்டையாட வந்த அவனைக் கண்டவுடன் எல்லாக் காகங்களும் பறந்து ஓடி விட்டன. இலவமரத்துக் காகம் மட்டும் ஒடவில்லை. இந்தக் கொடியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று அது ஒரு சோலைக்குள்ளே போய் ஒளிந்து கொண்டது.