84
ராசீ
“சொல்ல முடியாது; நான் இருக்க மாட்டேன்” என்றான்.
நான் பயந்து விட்டேன். இந்தப் பாவி ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் என்று பயந்து விட்டேன்.
“சவுதிக்குப் போவது என்று முடிவு செய்து விட்டேன்; இங்கே வேலை வாய்ப்பு இல்லை. குடும்பம் நலிந்து விட்டது; நான்தான் சம்பாதிக்க வேண்டும். என் பெற்றோர்கள் முதுமை அடைந்து விட்டார்கள்; அவர்களைக் காப்பாற்றுவது என் கடமை என்று நினைக்கிறேன். எனக்கு இங்கே எந்தப் பாசமும் இல்லை; யாருக்காக இங்கு இருக்கவேண்டும். இளமையில் பாடுபட்டால்தான் வளமாக வாழ இயலும்” என்று கூறினான்.
அவன் மனம் பிறழ்ந்து பேசுகிறானா? நிலை அறிந்து நெளிகிறானா? தெரியவில்லை.
“வாழ்த்தாவது அனுப்பிவை” என்று சொல்லி அவனிடமிருந்து விடை பெற்றேன்.
“பையனிடம் என்ன பேசிக் கொண்டிருந்தீர்” என்று பண்ணையார் என்னைக் கேட்டார்.
“ஏன் உங்களிடம் சொல்லவில்லையா! -அரபு நாட்டுக்குப் போய் வேலை செய்யப் போகிறான் என்று நுவல்கிறான்”.
“எனக்கு இதுவரை அவன் சொல்லவே இல்லையே”
“நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று அவன் சொல்லவில்லை”