தமிழகம் மூவேந்தர்க்கும் உடைமையாம் என்ற பொதுச் சொல் வழங்குவதைப் பொறாது, தம் தனியுடைமையாகக் கொண்டு தாம் ஒருவராகவே நின்று ஆண்ட அரசர்களின் வாழ்நாளும் மாண்டே போயின; தமிழகம் அனைத்தையும் தனிக் குடைக் கீழ் வைத்து ஆண்ட அவ்வரசர்களுள் ஒருவராவது இறவா நிலை பெற்றுள்ளாரல்லர். அனை வருமே மாண்டு மறைந்து போயினர். அவர் ஆண்ட பெருநாடும், அவர் ஈட்டிய பெருநிதியும் அவர் இறந்து போவுழி, இறவாத் துணையாக அவருடன் சென்றில. அவற்றையும் அவர்கள் இழந்தே போயினர். ஆகவே வாழ்வும் வளமும் செல்லும் உயிர்க்கு நல்ல துணைகள் ஆகா. மாறாக ஈண்டு அவர்கள் செய்யும் நல்வினை, அறத்தொடு பட்ட ஆக்கவினை ஒன்றே, உயிர்க்கு உற்ற துணையாய் அமையும்,” எனப் பிரமனார் கூறும் பொன் மொழியும், நிலையாமை கூறி அறம் வலியுறுத்தும் அப்பணி புரிவது காண்க. "குன்றுதலை மணந்த, மலைபிணித்து யாத்தமண் பொதுமை கட்டிய மூவர் உலகமும் பொதுமையின்றி ஆண்டி சினோர்க்கும் மாண்ட அன்றே யாண்டுகள்! துணையே வைத்தது அன்றே வெறுக்கை ! வித்தும் அறவினையன்றே விழுத்துணை ” -புறம் 357. இந்நிலையாமை உணர்விற்கே ஆசிரியர் தொல் காப்பியனார் காஞ்சி எனும் பெயர் சூட்டி விளக்கி யுள்ளார். "காஞ்சிதானே பெருந்திணைப் புறனே, பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே." -தொல். பொருள்: 78.
பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/306
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை