பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 55 வேண்டும்” என்றும் கேட்டனர். இந்திரனும் அவ்வாறே கொடுத்து மகிழ்ந்தான். பிப்பலாவின் கதை காசிபனின் மகனாகிய பிப்பலா உலகத்தில் உள்ள யாவரையும் விடத் தான் அதிக ஆற்றலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தவம் செய்தான். ஊண், உறக்கம் அனைத்தையும் துறந்து, தவம் செய்த அவன் உடம்பைச் சுற்றிப் பாம்புகள், கொடிய விலங்குகள் ஆகியவை இருந்தும் அவன் தவத்திலேயே இருந்தான். அவன் உடம்பைச் சுற்றிக் கரையான் புற்று வைத்தும், அவன் தவம் கலையவில்லை. இந்த நிலையில் 3,000 ஆண்டுகள் கழிந்தன. அவனுடைய ஆற்றல் அவனைச் சுற்றி நிறைந்திருந்ததுடன் அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளி வளையமும் உண்டாயிற்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் குறிப்பாக யாரையும் நினைத்து தவம் செய்யாததால் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது: பிப்பலா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்.” உடனே பிப்பலா, “இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றலை நான் பெற வேண்டும்” என்று கூறினான். அப்படியே ஆகட்டும் என்றது அசரீரி. மகிழ்ச்சி மிகுந்த பிப்பலா, ஒரு குளக்கரையில் அமர்ந்து கொண்டு தன்னையும், தான் பெற்ற வரத்தையும் மனத்தில் நினைந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தான். அப்பொழுது அக் குளத்தில் இருந்த ஒரு கொக்கு, "அடேய் பிப்பலா! 3,000 ஆண்டுகள் தவம் செய்து என்ன செய்துவிட்டாய்? ஒரு தவமும் செய்யாத சுகர்மா உன்னைவிட மிகப் பெரியவன். அவனைப் போய்ப் பார். நீ எவ்வளவு சாதாரணமானவன் என்பது தெரியும் என்று கூறிற்று. கொக்கு பேசிய அதிசயத்தைப் பார்த்த பிப்பலா, “நீ யார்?' என்று கேட்டான். அதையும்