பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

119

திசை. சால்பு - நற்குணங்கள். செம்மை - நடுநிலை பிறழாத தன்மை; சால்பும் நடுநிலையுள் அடங்கும். எனினும், அரசர்க்குச் செங்கோன்மை பிற நற்குணங்களினும் சிறப்புற அமைய வேண்டுவதாகலின் தனித்துக் கூறினார். மழகளிறு - இளங் களிறு. பிளிறல் - குரல் எழுப்பல். மிக்கெழு கடுந்தார் - மிகுதியாக எழுந்த கடிய விரைவையுடைய தூசிப்படை. துய்த்தலை - முடிவிடம்; எல்லை. ‘துப்பு துவர் போக' - வலியின்கண் முற்றவும் உயர்ந்து நிற்க. கிளை - பாணரும் கூத்தரும் போன்ற இரவன் மாக்களை. வளன்-செல்வம். கழங்கு - கழற்சிக்காய். தபுதல் - கெடுதல். வலம்படு வென்றி - போர்வெற்றிச் செயலொடு பொருந்திய குடிகாத்தலாகிய வெற்றி. மருட்சி - மயக்கம்; வியப்பு.

'நெடுமிடல்' என்றது அஞ்சியின் பெயரடை; நெடிய வலியுடையவன் என்பதாம்; இயற்பெயராகவும் கொள்வர். இவ்வாறே கொடுமிடல் என்றதும், கொடிய போர்வலிமை எனவும், அஞ்சியின் உடன்பிறந்தான் எனவும் கருதப்படும். இவர்கள் அஞ்சியின் மரபினர். சேர நாட்டார்க்கு உட்பட்ட குறுநில மன்னர்; சேரவரசர் குடியினைச் சார்ந்தவர். இவர்களுட் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான். இனி, இந்நெடுமிடல் என்பான் அரிமண வாயில் உறத்தூரிடத்தே, பசும்பூட் பொருந்தலரை வென்றான் என்பதனைப் பரணர் பாட்டால் அறியலாம் (அகம் 261). புலம் கெட்டது இவன் அழிக்கக் கருதியதனா லன்று; பெருமலை யானையொடு வந்து பாசறையிட்டுத் தங்கியதனால் அது அழிவுற்றது என்றதன் நயத்தைக் காண்க. வசையுநர் - பகைவர். முடந்தை - வளைந்த; இது கதிரின் பாரம் தாங்காது தலை சாய்ந்த நிலை. நெல்லின் கழை - நெற்றாள்; அதுதான் மூங்கிலைப்போல விளங்கிற்றென்பார் ’கழை' என்றனர். இச்சிறப்பாலே இப்பாட்டு ’கழையமல் கழனி' எனப் பெற்றது. 'பிழையா விளையுள் நாடு - தப்பாத விளைச்சலையுடைய நாடு. வசையுநர்க் கறுத்த - பகைவரைக் கோபித்த. 'சினவாயாகுதல்' என்றது, அவர்தாம் அத் தன்மையர் எனினும், நீதான் அவரைச் சினந்து கொள்வா யல்லை என்றதாம். இது, அவரும் பணிந்து திறை செலுத்தின ராயின், அவரையும் பொறுத்து ஆட்கொள்ளும் தன்மையன் என்ற தாம். இனி, அந்நாட்டு மக்கள்பாற் சினவாய் என்பதும் பொருந்தும். இதனால் அவன் பலவகைக் குணங் களுள்ளும் பொறையே சிறந்த குணமாதலைக் கூறினார். அரசனுக்குப் பொறை சிறப்பாதலைப் ’போற்றார்ப் பொறுத்த-