பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

121


செவ்வாய் எஃகம் வளைஇய அகழிற்
காரிடி உருமின் உரறு முரசின் 10

கால்வழங்கு ஆரெயில் கருதின்
போரெதிர் வேந்தர் ஒருஉப நின்னே!

தெளிவுரை: கொடிகள் விளங்கும் தேர்ப்படைகளை உடையவனாகிய தலைமையாளனே! நின் போர்ச்செயல்தான் வியப்பினால் பெரிதே யாகும். திருந்திய மணிகளைப் பக்கத்திலே கொண்ட, துடியையொத்த வலிய தாளையுடைய களிற்றினைப் பகைவரது காவன்மரத்திலே கொண்டுபோய்க் கட்டினை. ஆழமாகிய நிரையுடைய நீர்த்துறைகள் எல்லாம் கலங்குமாறு மொய்த்துச்சென்று, முற்பட்டுத் தங்குவது நின் தூசிப்படை. அதனோடு பகைவர் நாடு கெடும்படியாக, எல்லையற்ற வெள்ளம்போன்ற நின் பெரும் படையானது வளைந்து வளைந்து அணிவகுத்துச் செல்லும். அப்படை மறவர்தம் வாட்படையே நினது கோட்டை மதிலாகவும் உயர்ந்த வேற்படையே நினது காவற்காடாகவும், விற்கள் விசையோடு வெளிப்படுத்தும் கூர்மையான முள்போன்ற அம்புகளும், சிவந்த முனையுடைய பிற படைக்கருவிகளும் நின்னைச் சூழ்ந்திருக்கும் அகழியாகவும் கொண்டவனாக, நீ பாசறையிட்டுத் தங்குவாய். கார்காலத்தே இடிக்கும் இடியினைப்போல ஒலிக்கின்ற முரசினையுடையதும், காலால் நடக்கின்ற சிறப்பையுடையதுமான, நின் பகைவரால் கடத்தற்கரிய அரணைப்பற்றிக் கருதினால், நின்னோடு போர்செய்யக் கருதிய வேந்தர்கள், நின் வலிமைக்கு முன் எதிர்நிற்க மாட்டாராய்த் தம் மனவலி அழிந்தாராக ஓடி ஒளிவர். இதுதான் பெரிதும் வியக்கத்தக்கது பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: அண்ணல் - தலைமைப்பாடு கொண்டவன். வடிமணி - திருந்திய ஒலியைச் செய்யும் மணி; வார்த்துச் செய்த மணியும் ஆம். அணைத்த- இருபக்கமும் தொங்கக் கட்டியிருக்க விளங்கும். பணை - அடி; உடுக்கை. நோன்மை - வலிமை. கடிமரம் - காவல்மரம். பகைவரது காவன்மரத்தில் களிற்றைக் கட்டுதல் அவரைத் தான் வெற்றி கொண்டதனைக் காட்டும் அடையாளமாம்; அவர் அதனைத் தடுக்க முற்பட்டுப் போரியற்ற வேண்டும்; அல்லது பணிந்துபோக வேண்டும். இரண்டுமன்றி ஓடி மறைபவர் மறப்பண்பினர் ஆகார். 'நெடுநீர துறை கலங்க’ என்றது, பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகளை அழித்தலைக்