பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பதிற்றுப்பத்து தெளிவுரை

அழகு: நிமிர்ந்த மார்பெழிலும் ஆம். ஆகம் - மார்பு. மெய்ம்மறை - கவசம்; அவ்வாறு காப்பவன் என்பது பொருள். தன் படைமறவர் பகைப்படை மறவரால் பெரிதும் தாக்கப் பெற்ற வழித், தானே சென்று அப்படையினது செருக்கைக் கெடுத்துத் தன் படைமறவரைக் காப்பவன் சேரனென்பதும் ஆம். வானவரம்பன் - வானத்தை எல்லையாகக் கொண்டவன்; மலைநாட்டானாகிய சேரலாதன்.

கானம் - காடு. இசை கறங்கு இதடி - இசைப்பது போல ஒலிக்கும் சிள்வீடு. அரை - மரத்தின் அடிப்பகுதி. சிறிஇலை - சிறிதான இலைகள்: வேலம் - கருவேலமரம். பெரிய தோன்றும் - மிகுதியாகத் தோன்றும்; 'பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் உண்ணும் மன்னே' (புறம் 235) என வருவது காண்க. பகடு சீருடையதாதல், புன்செய்ப் பகுதி உழவிற்குச் சிறந்த தகுதி உடைத்தாதல். 'பகடு ஒலிப்ப’ என்றது, பகடுகளின் கழுத்திற் கட்டியுள்ள மணிகள் ஒலி செய்ய என்றதாம். 'கொழுவழி மருங்கு' என்றது, கொழுப் பிளந்து சென்ற உழவுசாலின் இரு பக்கத்தையும். அலங்கல் அசைதல்; விட்டுவிட்டு ஒளிர்தல். திருமணி - அழகிய மணி; செம்மணியும் ஆம். வைப்பு - ஊர். வைப்பின் நாடு - ஊர்களையுடைய நாடு என்க; உழுவோர் தாம் பெறும் விளையு ளாகிய பிற்பயனை யன்றியும், அப்போதுதானே சிறந்த மாணிக்கக் கற்களையும் பெறுகின்ற வள நாடு என்க. விறலியர் - பாண்மகளிருள் கூத்து இயற்றும் மகளிர். பரிசிலர் - பாணரும் புலவரும் பிறருமாகியவர்; இவர் தம் புலமையைக் காட்டிப் பரிசில் பெறுவாரேயன்றி, இரந்து உண்ணும் இரவலராகார் என்க.


59. மாகூர் திங்கள்!

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மாகூர் திங்கள். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வென்றிச் சிறப்பு. [பெயர் விளக்கம்: மாசித்திங்கள் விலங்குகளும் நடுங்கும் குளிரை உடையதென்று கூறிய சிறப்பால், இப்பாட்டு, இப் பெயரைப் பெற்றது.]


பகல்நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மரகூர் திங்கள்